தமிழக கோவில்களுக்கு அசாமிலிருந்து 5 யானைகள்; மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த ‘துர்கா’

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு 5 யானைகள் அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. 

இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு துர்கா என்ற 5 வயது பெண் யானையும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஹீராலால், சிவா என்ற இரு யானைகள், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ரூப்சிங் என்ற 13 வயது ஆண் யானை, மற்றும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு புஜ்லி என்ற 5 வயது பெண் யானையும் வாங்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒட்டகமும் வாங்கப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டது. 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வரும் 17 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை அசாமிலிருந்து வாங்கிய துர்கா யானை கொண்டு வரப்பட்டது.

கோயில்களுக்குப் புதிதாக யானைகள் வாங்கவோ, தானமாகப் பெறவோ கூடாது என்று தனி நீதிபதி விதித்திருந்தது.

துர்கா யானை

இந்தத் தடையைச் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. 

இதனால் அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த 5 வயது பெண் யானை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் வளாகத்திற்கு வந்தடைந்த இந்த யானைக்கு பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.