Asia Cup: ACC தலைவர் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்த இந்தியப் பெண்கள் அணி; என்ன நடந்தது?

துபாயில் நடந்த Women’s Asia Cup இறுதிப்போட்டியில் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 8-வது முறையாக ஆசியக் கோப்பையைத் தட்டிச் சென்றிருக்கிறது இந்திய மகளிர் அணி. ஆனால், பட்டம் வென்ற மகிழ்ச்சிக்கு நடுவே நடந்த ஒரு சம்பவம்தான் இப்போது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

முதலில் நடந்தது என்ன?

இந்தியா - இலங்கை அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணியால் இந்தியப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தனது 8-வது Women’s Asia Cup பட்டத்தை வென்றுள்ளது.

ஆனால்... கோப்பையை வாங்கச் செல்லவில்லை!

போட்டி முடிந்ததும் வழக்கமாக நடைபெறும் பரிசளிப்பு விழா நடந்தது. அப்போது Asia Cup கோப்பையை இந்திய அணிக்கு வழங்க இருந்தவர் மொஹ்சின் நக்வி. இவர் Pakistan Cricket Board-ன் தலைவராகவும், Asian Cricket Council-ன் தலைவராகவும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

ஆனால், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய வீராங்கனைகள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக மைதானத்துக்கே வரவில்லை. இதனால் கோப்பை வழங்கும் நிகழ்வும் நடைபெறவில்லை.

இதுகுறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முசும்தார் கூறியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

“இந்தியா அதிகாரப்பூர்வமாக Asia Cup சாம்பியன். கோப்பை இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு அது முக்கியமில்லை. நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெறாதது BCCI-யின் நிலைப்பாடு. இதுகுறித்து எங்களால் எதுவும் கூற முடியாது.”

கடந்த ஆண்டும் இதே நிலை!

இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு இந்திய ஆண்கள் அணியும் மொஹ்சின் நக்வியிடம் இருந்து Asia Cup கோப்பை மற்றும் பதக்கங்களைப் பெற மறுத்திருந்தது.

அப்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, கோப்பை இல்லாமலேயே மேடையில் வெற்றியைக் கொண்டாடியது. அந்த Asia Cup கோப்பை பின்னர் ACC அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை பெண்கள் அணி அதையும் தாண்டி, பரிசளிப்பு நிகழ்ச்சிக்கே வராமல் இருந்திருக்கிறது.

இலங்கை அணிக்கு வழங்கப்பட்ட பரிசு

இதற்கிடையே, இலங்கை அணியின் வீராங்கனைகள் மற்றும் support staff-க்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. பின்னர் இலங்கை அணியின் runner-up பரிசுத் தொகைக்கான காசோலையையும் மொஹ்சின் நக்வி வழங்கினார்.

இலங்கை கேப்டன் சமரி அத்தபத்துவுக்கு விருது வழங்கிய பிறகு நக்வி மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால் கடந்த ஆண்டைப் போல இந்த முறை கோப்பையை எடுத்துச் செல்லவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரசியல் பதற்றம் தொடரும் நிலையில், இரு நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் சர்வதேச மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் சந்திக்கும்போது கைகுலுக்காத நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.