“என்னிடம் ஏதோ ஒன்றை அவர் பார்த்திருக்க வேண்டும்.!” – விராட் கோலி ஆதரவு குறித்து ரஜத் படிதார்!
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், நட்சத்திர வீரர்கள் என பல சிறப்புகள் இருந்தாலும், பல ஆண்டுகளாக அந்த அணியைச் சுற்றியிருந்த ஒரே குறை ஐபிஎல் கோப்பைதான். அந்தக் குறைக்கு 2025-ல் முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி.
அந்த வெற்றிப் பயணத்தின் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவர் ராஜத் படிதார். எதிர்பாராத விதமாக அணியின் கேப்டன் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. காரணம், அதற்கு முன்புதான் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் கேப்டன்சி அனுபவத்தைத் தொடங்கியிருந்தார்.
அதிலும், அணிக்குள் விராட் கோலி போன்ற மிகப்பெரிய நட்சத்திரம் இருக்கும்போது, புதிய கேப்டனாக செயல்படுவது சாதாரண விஷயமல்ல. ஆனால் படிதாருக்கு அந்தப் பொறுப்பை ஏற்கும் நேரத்தில் மிகப்பெரிய பலமாக அமைந்தது கோலியின் நம்பிக்கை.
சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ள படிதார், கோலியைத் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முன்மாதிரியாகப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். வீரராக கோலி விளையாடும் விதம் மட்டுமல்லாமல், களத்துக்கு வெளியே அவர் கடைப்பிடிக்கும் ஒழுக்கம், பழக்கவழக்கங்களையும் தான் கவனித்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.
தன்னை கேப்டனாக நியமித்த முடிவுக்கு கோலி ஆரம்பத்திலிருந்தே ஆதரவாக இருந்ததை பின்னர் தான் தெரிந்துகொண்டதாகவும் படிதார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ``ஆர்சிபி போன்ற மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணியின் கேப்டன் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பது எளிதான முடிவாக இருக்காது. என்னிடம் ஏதோ ஒன்றை அவர் பார்த்திருக்க வேண்டும். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அணியில் ஒரு வீரராக அவரிடமிருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைத்திருக்கிறது” என்று படிதார் தெரிவித்துள்ளார்.
“நான் முன்மாதிரியாக நினைக்கும் ஒருவர் எனக்கு ஆதரவாக இருக்கும்போது, அதைவிட வேறு என்ன வேண்டும்? வேறு யாருடைய ஆதரவும் எனக்குத் தேவையில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோலியின் நம்பிக்கைக்கு படிதார் கொடுத்த பதிலும் சாதாரணமானதல்ல. 2025-ல் ஆர்சிபி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. அடுத்த ஆண்டும் அதே வேகத்தைத் தொடர்ந்த ஆர்சிபி, 2026-லும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
இப்போது இரண்டு ஆண்டுகளில் இரண்டு கோப்பைகள் என்ற சாதனையுடன் நிற்கும் ஆர்சிபி, 2027-ல் தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முதல் அணியாக வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.
ஒரு காலத்தில் “கோப்பை எப்போது? என்ற கேள்வியை எதிர்கொண்ட ஆர்சிபி, இன்று “ஹாட்ரிக் கோப்பை அடிக்குமா?” என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பதுதான் அந்த அணியின் மிகப்பெரிய மாற்றம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

