அஜித் அகர்கர் பதவிக்காலம் முடிகிறது.. பதவி நீட்டிப்பா? வேறொருவர் நியமனமா?
இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய செயல்பாடுகள், வீரர்களின் தொடர் காயங்கள் மற்றும் அணி தேர்வு தொடர்பாக பிசிசிஐ முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் தலைவர் விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இந்தியா சந்தித்த தோல்விகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, முக்கியமான வெளிநாட்டு தொடர்களில் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை தொடர்வது குறித்து பிசிசிஐ கவனம் செலுத்த உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா ஆகியோரின் உடற்தகுதி நிலையும் முக்கிய விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபரில் நடைபெற உள்ள நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான அணி திட்டம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக 5 முதல் 6 வேகப்பந்து வீச்சாளர்களை தயார்படுத்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, அஜித் அகர்கரின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்காலம் செப்டம்பரில் முடிவடைய உள்ளதால், அவருக்கு நீட்டிப்பு வழங்குவது குறித்தும் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறும் பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


