வறுமையை உதைத்துத் தள்ளிய கால்பந்து வீரங்கனை- ஸீனாவின் வரலாறு கேரள பாடத்திட்டத்தில் இடம்பிடித்தது!

கேரள மாநிலம், எர்ணாகுளம் சளிக்கம்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சி.வி.ஸீனா. தற்போது 56 வயதாகும் அவரது விடாமுயற்சி நிறைந்த வாழ்க்கை, கேரள அரசின் 11-ம் வகுப்பு மலையாளப் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. எர்ணாகுளத்தின் சளிக்கம்வட்டம் பகுதியில் பிறந்த ஸீனா-வுக்கு ஒரு வயது இருந்தபோதே தந்தை குடும்பத்தை விட்டு விலகிச் சென்றார். தாய் கார்த்தியாயினி கூலி வேலை செய்துதான் ஸீனாவையும் அவரது உடன்பிறப்புகளையும் காப்பாற்றி வந்தார். ​ஸீனா எட்டாம் வகுப்பு படிக்கும்போது தாய் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அவரது மூன்று சகோதரர்களும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஸீனாவுக்குத் துணையாக அக்கா தீனா மட்டுமே எஞ்சியிருந்தார்.

​பசியும் தனிமையும் மட்டுமே அன்றாட வாழ்க்கையாக இருந்தது.

​பள்ளியில் நண்பர்கள் மதிய உணவு சாப்பிடும்போது, தன்னிடம் உணவு இல்லாததால் ஸீனா ஒரு ஓரமாக அமர்ந்து அழுவதுண்டு. ​பின்னர், அஜிதா நாராயணன் என்ற உறவினர் இந்த இரண்டு பேரையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுத்து வளர்த்தார்.

கேரள பாடப் புத்தகத்தில் ஸீனா வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

தாய் வேலைக்குச் செல்லும் நேரங்களில் அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் பந்து விளையாடி வந்த ஸீனா, தனது 11-வது வயதில் தீவிரமாக கால்பந்து மைதானத்தில் இறங்கினார். ​பள்ளி அணிகள் மற்றும் உள்ளூர் கிளப்களில் விளையாடி மாவட்ட அணிக்குள் நுழைந்தார். ​கால்பந்தே தனது வாழ்க்கை என முடிவு செய்து, திருமண வாழ்க்கையைத் தவிர்த்து விளையாட்டிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். ​கேரள மாநில அணிக்காக மட்டுமன்றி, தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகளுக்காகவும் களமிறங்கினார்.

​களத்தில் ‘மிட்பீல்டர்’ பொறுப்பில் அபாரமாகச் செயல்பட்டு தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் முத்திரை பதித்தார். 2016-ல் தனது ஆட்டக்களப் பயணத்தை நிறைவு செய்த ஸீனா, சிறந்த பயிற்சியாளராக உருவெடுத்தார். கேரள கால்பந்து சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளரான இவர், மரடு பகுதியில் ஸீனாஸ் ஃபுட்பால் அகாடமி நடத்தி வருகிறார். மேலும் திருப்பூணித்துறா ஸ்ரீநாராயணா பப்ளிக் பள்ளியின் கால்பந்து பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 2000-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.

சி.வி.ஸீனா

வாழ்க்கை தொடர்ச்சியான இழப்புகளையும் வறுமையையும் பரிசளித்தபோதும், கால்பந்து என்ற ஒற்றை நம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சர்வதேச வீராங்கனையாகவும் புகழ்பெற்ற பயிற்சியாளராகவும் உயர்ந்த ஸீனாவின் வாழ்க்கை வரலாறு கேரள மாநிலத்தில் 11-ம் வகுப்பு மலையாள பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து ஸீனா கூறுகையில்,"நான் ஜீரோவில் இருந்துதான் ஹீரோவாக மாறினேன். கடுமையான துயரங்களையும் சவால்களையும் எதிர்கொண்டுதான் இந்த நிலையை அடைந்துள்ளேன்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.