2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதி தொடங்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்தத் தொடர், மகாத்மா காந்திக்கும் தென் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர்பைக் கவுரவிக்கும் வகையில் இந்தத் தேதியில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த முறை உலகக் கோப்பை தொடரில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், புதிய வடிவமைப்பு முறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 12 அணிகள் ஏற்கனவே நேரடியாகத் தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இடங்கள் தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூலம் நிரப்பப்படவுள்ளன.
தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், காந்தியின் நினைவாக அக்டோபர் 2ஆம் தேதியைக் தொடக்க நாளாக நிர்ணயிக்க தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. இந்தச் செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


