TNPL 2026: மிரட்டிய சச்சின்.. 85 ரன்களில் சுருண்ட திருச்சி! 116 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வெற்றி!

டி.என்.பி.எல் 2026 தொடரின் 20-வது லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற திருச்சி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், ஆட்டம் முடிவில் அந்த முடிவே அவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த கோவை அணிக்கு தொடக்கத்தில் ராதாகிருஷ்ணனும் சுரேஷ் லோகேஷ்வரும் அதிரடி ஓபனிங் கொடுத்தனர். ராதாகிருஷ்ணன், ஈஸ்வரன் பந்துவீச்சில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை விளாசினார்.

ஆனால், அடுத்த பந்தில் மீண்டும் பெரிய ஷாட் அடிக்க முயன்றபோது மிட்-ஆஃபில் பவன் சூரியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பிறகு லோகேஷ்வரும் விரைவிலேயே ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்து‌ கொண்டிருக்க, மறுபுறம் சச்சின் ரன்களை சேர்த்துக்கொண்டே சென்றார்.

கடைசி கட்டத்தில் மாதவ பிரசாத்துடன் இணைந்து சச்சின் அதிரடி காட்டினார். இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக ஈஸ்வரனின் பந்தில் நேராக சிக்ஸர் அடித்த சச்சின், அடுத்த பந்திலேயே ஸ்கொயர் கட் மூலம் பவுண்டரி விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. சச்சின் 77 ரன்கள் விளாசி கோவை அணியின் இன்னிங்ஸுக்கு முதுகெலும்பாக இருந்தார்.

202 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணிக்கு ஆரம்பமே சரியாக அமையவில்லை. விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், கே. ராஜ்குமார் மட்டும் 32 ரன்கள் எடுத்து போராடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் கோவை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர்.

கோவை அணியின் பந்துவீச்சில் ஜதவேத் எஸ். மற்றும் தீபன் லிங்கேஷ் ஆகியோர் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக ஜதவேத் 3.1 ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து திருச்சி அணியின் பேட்டிங் வரிசையை சிதறடித்தார்.

இறுதியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 16.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை கிங்ஸ் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.இந்த ஆட்டத்தில் 77 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்த பி. சச்சின், ஆட்டநாயகன் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.