Commonwealth: தொடர்ந்து 3 முறை தங்கப் பதக்கம் வென்று மீராபாய் சாதனை - இந்தியாவுக்கு முதல் தங்கம்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார், காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

31 வயதில் தனது அபார திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் மீராபாய் சானு. ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோவும் என மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். அதோடு, ஸ்னாட்ச் பிரிவில் காமன்வெல்த் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சாதனைகளையும், கிளீன் அண்ட் ஜெர்க் மற்றும் மொத்த எடைப் பிரிவுகளில் புதிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி சாதனைகளையும் படைத்து தனது பெயரை மீண்டும் வரலாற்றில் பதித்தார்.

சர்வதேச பளுதூக்குதல் அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் மீராபாய் சானு, தனது ஒவ்வொரு போட்டியிலும் புதிய வரலாறுகளை எழுதி வருகிறார்.

2017 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று உலக சாம்பியனாக உயர்ந்த அவர், அதே தொடரில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள அவர், 2018-ஆம் ஆண்டு 49 கிலோ எடைப் பிரிவில் ஸ்னாட்ச், கிளீன் & ஜெர்க் மற்றும் மொத்த எடை ஆகிய மூன்று பிரிவுகளிலும் புதிய போட்டி சாதனைகளைப் படைத்தார்.

அந்தச் சாதனைகளில் நிற்காமல், 2022 மற்றும் 2026 காமன்வெல்த் போட்டிகளில் தனது சொந்த சாதனைகளையே முறியடித்து, ஒவ்வொரு முறையும் தனது எல்லைகளைத் தாண்டிச் செல்லும் சாம்பியனாக மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார்.

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான நோங்போக் காக்சிங்கில் பிறந்த மீராபாய் சானுவின் பயணம், இன்று உலகமே கொண்டாடும் ஒரு வெற்றிக் கதையாக மாறியுள்ளது. ஆறு உடன்பிறப்புகளில் இளையவரான அவர், வசதிகள் குறைந்த குடும்பத்தில் வளர்ந்தாலும், மன உறுதியிலும் உடல் வலிமையிலும் சிறுவயதிலேயே தனித்துவமாகத் திகழ்ந்தார்.

வெறும் 12 வயதிலேயே, தனது மூத்த சகோதரர்களால் கூட சுமக்க முடியாத விறகுக் கட்டையை எளிதாகத் தோளில் சுமந்த அந்தச் சிறுமிக்குள் ஒரு சாம்பியன் ஒளிந்திருப்பதை அப்போது யாரும் உணரவில்லை. அந்த இயல்பான வலிமையே அவரை பளுதூக்குதல் உலகை நோக்கி அழைத்துச் சென்றது. தனது

கனவை நனவாக்குவதற்காக, சொந்த கிராமத்திலிருந்து இம்பாலில் உள்ள விளையாட்டு அகாடமிக்கு தினமும் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் பயணித்து பயிற்சிக்குச் சென்றார்.

சவால்கள், வறுமை, நீண்ட பயணங்கள் என ஒவ்வொரு தடையையும் தாண்டி முன்னேறிய அந்தச் சிறுமிதான், இன்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் மீராபாய் சானுவாக உயர்ந்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.