தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில்: துக்கங்கள் தீர்ப்பாள் அஷ்டபுஜ துர்கை!
அம்பிகையின் திருவடிவங்களில் ஒன்று துர்கை. அசுரனை வதம் செய்ய எடுத்த இந்தத் திருவடிவத்தோடு அம்பிகையின் சந்நிதி பெரும்பாலும் கோயில்களின் கோஷ்டத்தில் இருந்தாலும் துர்கையே பிரதானசந்நிதிகளில் ஒன்றாகவும் துர்கையின் புராணத்தோடு தொடர்புடையதாகவும் அமைந்துள்ள கோயில்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று அம்மன்குடி.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ளது அம்மன்குடி. இங்கே அருள்பாலிக்கும் துர்கையை வழிபட்டால் ராகுதோஷம் மட்டுமல்ல, சகல தோஷங்களும் நீங்கும்; நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
தேவர்களையும் சகல லோகங்களையும் ஆட்டிப்படைத்த மகிஷாசுரனை வதைத்தாள் அம்பிகை. அவனைக் கொன்றதால் உண்டான பாவ தோஷத்தைப் போக்கிக்கொள்ள பல திருத்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டாள் துர்காதேவி.
அன்னை திருவீழிமிழலை தலத்தை வந்தடைந்தபோது, அவளின் கையிலிருந்த சூலாயுதம் விருட்டெனக் கிளம்பிப் பறந்து, நெடுந்தூரம் சென்று ஒரு தடாகத்தில் விழுந்தது. அன்னை தடாகம் இருந்த இடத்தை அடைந்தாள். சூலாயுதத்தில் இருந்த குருதி தடாக நீரில் கலந்து, தடாகமே செந்நிறமாகக் காட்சி அளித்தது.
சூலாயுதம் ரத்தக்கறை நீங்கி பரிசுத்தமாகி இருந்தது. நடப்பது எல்லாம் சிவப்பரம்பொருளின் அருளாடலே என்பதை உணர்ந்து சிலிர்த்தாள். தன் பாவம் நீங்கப் போகும் இடம் இதுதான் போலும் என்று எண்ணி, அந்தத் தடாகத்தில் இறங்கி நீராடினாள். அவள் கரையேறியபோது ஓர் அசரீரி ஒலித்தது.
`இங்கே 12 வருடங்கள் தவம் செய்’ என்றது. அதன்படி கயிலாயநாதரை எண்ணி தவத்தில் ஆழ்ந்தாள் துர்கை. தன்னுடைய தவத்துக்கு எவ்வித இடையூறும் நிகழக்கூடாது என்று தபஸ் விக்னஹர விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வைத்தாள். விநாயகரை வழிபட்டுத் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும் என்பதற்கு சாட்சியாக அம்பிகையும் தவத்தை சிறப்பாகப் பூர்த்தி செய்ய, அதில் மனம் மகிழ்ந்த ஈசன் அன்னைக்குக் காட்சி கொடுத்து அவள் பாவம் தீர்த்தது என்றார். மேலும் இத்தலத்தில் கோயில்கொண்டு அனைவருக்கும் அருள்பாலிப்பாயாக என்றும் கூறியருளினார்.
அதன்படி துர்கை அம்மன் அங்கேயே குடிக்கொண்டாள். அம்மன் குடி கொண்டதால் இத்தலத்துக்கு, அம்மன்குடி என்று பெயர் வந்தது என்கிறது தலபுராணம். `தேவி தபோவனம்’ என்றும் ஞானநூல்கள் சிறப்பிக் கின்றன.

துர்காதேவியின் பாவத்தைப் போக்கிய தலம் என்பதால், அம்மனை நாடி வரும் அன்பர்களின் பாவங்கள் தொலையும் என்பது ஐதிகம். `அம்மன்குடி துர்கையின் அருளால் தஞ்சை தரணியே செழித்தது’ என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள்.
தரணி போற்ற நாடாண்ட மாமன்னர் ராஜராஜ சோழப் பெருவுடையாரின் படைத் தலைவரான கிருஷ்ணன்ராமன் பிரம்ம ராயர், அம்மன்குடி துர்கையின் தீவிர பக்தர்.
பெரும் படையெடுப்போ அல்லது வேறு முக்கிய காரியங்களோ... எதுவாயினும் முதலில் இந்த அம்மனை வணங்கியபிறகே காரியத்தில் இறங்குவாராம் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர். அதனால் அவருக்கும் சோழதேசத்துக்கும் வெற்றிமேல் வெற்றி கிடைத்தது என்கிறார்கள். அவர் இந்த ஆலயத்தில் கருங்கல் திருப்பணிகளை மேற்கொண்டதுடன், கோயிலுக்கு ஏராளமான நிவந்தங்களையும் அளித்து வழிபட்டிருக்கிறாராம். ஸ்காந்த புராணத்தின் 66-வது அத்தியாயத்தில், இந்தத் தலத்தின் சிறப்புகள் பற்றிய குறிப்புகள் உண்டு என்கிறார்கள்.

அற்புத சாந்நித்தியத்துடன் திகழ்கிறது அம்மன்குடி ஆலயம். இந்த ஆலயத்தில் மூலவர் அருள்மிகு கயிலாசநாதர், கிழக்குநோக்கி அருள, பார்வதிதேவி தெற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாள். பெரும்பாலான சிவாலயங்களில் கோஷ்டத்தில் வடக்கு நோக்கி அருளும் துர்காம்பிகை இங்கே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கருவறையில்... உக்கிரத்துடன் ஒரு துர்கையும், சாந்தமும் கனிவும் பொங்க இன்னொரு துர்கையும் தரிசனம் தருவது சிறப்பு.
ராகு பகவானுக்கு அதிதேவதை ஶ்ரீதுர்கை. எனவே, ராகுகாலத்தில் அம்மன்குடி ஆலயத்துக்குச் சென்று, துர்கையை வணங்கி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். குறிப்பாக செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில் அம்மன்குடிக்குச் சென்று, குங்கும வண்ண வஸ்திரம், எலுமிச்சை மாலை சமர்ப்பித்து, பயத்தம் பருப்பு பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், ராகு கிரகப் பாதிப்புகள் விலகும்; திருமண தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற விசேஷ நாள்களில் அம்மன்குடி துர்கைக்கு நிகழும் வழிபாடுகளில் கலந்துகொண்டு தரிசித்து வந்தால், குடும்ப ஒற்றுமை ஓங்கும்; எதிரிகள் தொல்லை ஒழியும்; சகல ஐஸ்வரியங்களும் பொங்கிப் பெருகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


