திருவள்ளூர், செங்கரை காட்டுச் செல்லியம்மன்: அம்மனுக்கு வடை மாலை... பிள்ளைவரம் நிச்சயம்!
தமிழகம் முழுவதும் மாறுபட்ட திருக்கோலங்களில் அம்மன் அருள்பாலிக்கும் கோயில்கள் நிறைந்துள்ளன. அப்படி ஏரிக்கரையில் செக்கச் செவேல் என அம்மன் காட்சி தரும் ஒருதலம் தான் `செங்கரை.’
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், தண்டலம் எனும் ஊர் வரும். இதையடுத்து வரும் ஊர் சூலைமேனி. இங்கிருந்து தேர்வாய் கண்டிகை - சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது செங்கரை கிராமம்.
இங்கே கோயில் எனப் பெரிய கட்டுமானங்கள் இல்லை. கோபுரங்கள் இல்லை. அன்னை காட்டின் நடுவே வேதைக் கொடி யின் கீழ் அருள்கிறாள். இவர் திருப்பெயர் காட்டுச்செல்லி அம்மன். சிறிய வெற்றிலையைப் போன்ற தோற்றத்துடன் சற்றுத் தடிமனான இலைகளைக் கொண்டது வேதைக் கொடி. இதுவே படர்ந்து பந்தல் போல் அமைந்து அம்மனுக்கும் பக்தர்களுக்கும் நிழல் தருகிறது.
ஒருமுறை, அம்மனுக்குக் கோயில் கட்ட விரும்பி, அவளிடம் உத்தரவு கேட்டார்கள் பக்தர்கள். அப்போது மூதாட்டி ஒருத்தி அருள் வந்து ஆடினாள். `எனக்குப் பொங்கல் வைத்து, பொங்கல் பொங்குமுன் கோயில் கட்ட வேண்டும். தவறினால், கட்டிய கோயில் இடிந்து விழும். காடு தீப்பற்றி எரியும்’ என்று அருள்வாக்கு சொன்னாள் அம்மன்.
அன்னையின் விருப்பம் என்னவென்று மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆகவே, புற்றுக்குள் இருந்த அவளிடம், புற்றுமண் நீக்கி தரிசனம் செய்ய அனுமதி வேண்டினர். அனுமதி கிடைத்தது. வியாழக்கிழமை அன்று புற்றைச் சிறிது சிறிதாக நீக்கிட... தீச்சுடர் மகுடம் தரித்து, நான்கு கரங்களுடன், அமர்ந்த கோலத்தில் சர்வாபரணங்களும் சூடியவளாக அம்மன் அற்புத தரிசனம் தந்தாள்!
இந்த அம்மனுக்கு வியாழக்கிழமைதோறும் பகலில் வந்து பொங்கலிட்டுப் படைத்து, தங்களின் குலசாமியாகக் கருதி வழிபடத் தொடங்கினர். மாலை 6 மணிக்குக் காட்டை விட்டு வெளியேறுவதையும் வழக்கமாக்கினர்.

வேதைக்கொடிப் பந்தலின் கீழ் ஜன்னி, கொஞ்சை, கருங்காலி, வில்வம், தும்பி போன்ற மூலிகைச் செடிகள் சூழ்ந்து திகழ, தன் சந்நிதியை நாடி வரும் பக்தர்களின் வேதனை களைத் தீர்த்து, அவர்களின் நல்லெண்ணங்கள் ஈடேற அருள்செய்து வருகிறாள். இவள் மாலை 6 மணிக்குமேல் காட்டைச் சுற்றி உலவி, மக்களின் துன்பம் தீர்த்து ரட்சிப்பதாக நம்பிக்கை.
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஓர் ஆங்கிலேய அதிகாரிக்கு அம்மன் அருள் செய்த கதை இந்தப் பகுதியில் பிரசித்தம். ஒருமுறை அந்த அதிகாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அம்மனின் அபிஷேக நீரைத் தெளித்தும் கையில் அம்பாளின் பிரசாதமான எலுமிச்சைக் கனியைக் கொடுத்தும் காப்பாற்றினர் ஊர் மக்கள். இதனால் அம்மன் மீது அந்த துரைக்கு பக்தி உண்டானது என்கிறார்கள்.
இந்தக் கோயிலில் தினமும் அபிஷேகமும், ஒரு கால பூஜையும் நடைபெறுகின்றன. அம்மன் முதலில் இங்கு வந்து அமர்ந்ததும், புற்றிலிருந்து வெளிப்பட்டதும் வியாழக்கிழமையே என்பதால், அன்றைய தினம் அம்மனை வழிபடுவதை விசேஷமாகக் கருது கிறார்கள் பக்தர்கள்.
ஆடி மாதத்தில் `காய்கறி சீர்கட்டு’ எனும் காய்கறி அலங்காரமும், கூழ் வார்த்தலும் நடை பெறுகின்றன. சித்திரை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், அம்மனுக்கு உளுந்து வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். பக்தர்களுக்கும் ஊருக்கும் வடை விநியோகம் செய்கிறார்கள். பிணிகள் தீர விரும்புவோர் அம்மனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பித்து வழிபடுகிறார்கள்.

குழந்தை வரம் வேண்டுவோர் தொடர்ந்து 9 வாரங்கள் இங்கு வந்து அம்மனை வழிபடு கிறார்கள். அன்னையின் அருளால் குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தைக்கு `செல்லன்’ என்றோ `செல்லி’ என்றோ பெயர் சூட்டி, இங்கே மொட்டைப் போட்டு காதுகுத்தும் வைபவமும் நிகழ்த்துகிறார்கள். திருமணத் தடைகள் நீங்கிட, அம்மனை வணங்குவதுடன், வஸ்திரத்தைக் கிழித்துப் பீரை மரத்தில் கட்டி விட்டுச் செல்கிறார்கள்! இப்படி அற்புதமாக அருள்பாலிக்கும் இந்த சுயம்பு செல்லி அம்மனை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீரும். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

