நடிகர் அஜித்தின் தந்தை மறைவு: ‘மருத்துவர்களுக்கு கடமைபட்டுள்ளோம்’- சகோதரர்கள் அறிக்கை
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85.
‘துணிவு’ படத்துக்குப்பின், அடுத்தப் படத்திற்கான பணிகளுக்கு இடையே தனது குடும்பத்துடன் ஓய்வில் இருந்து வருகிறார் நடிகர் அஜித். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் நீண்ட நாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை உயிரிழந்தார்.
அஜித்தின் தந்தை, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து, நடிகர் அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது தந்தை பி.எஸ்.மணி பல நாட்களாக உடல்நலன் சரியின்றி இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். அவருக்கு வயது 85.
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்களது தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தும் வந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைபட்டுள்ளோம்.

சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்களது தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை எங்களது தந்தை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, அலைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.
தற்போதுள்ள இந்த சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை ஏற்கவோ அல்லது பதில் தகவல் அனுப்பவோ இயலாவிட்டால், எங்கள் சூழலை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதிச் சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

அஜித்தின் தந்தை மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


