விஜய் ஹசாரே டிராபி: பஞ்சாபை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சவுராஷ்டிரா

விஜய் ஹசாரே தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப்- சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி பஞ்சாப் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரரும் கேப்டனுமான பிரப்சிம்ரன் சிங் 87 ரன்களும் அடுத்து வந்த அன்மோல்பிரீத் சிங் சரியாக 100 ரன்களும் அடிக்க பஞ்சாப் அணி 50 ஓவரில் 291 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா அணி களம் இறங்கியது. கேப்டன் ஹார்விக் தேசாய்- விஷ்வராஜ் ஜடேஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹார்விக் கேசாய் 63 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22 ஓவரில் 172 ரன்கள் குவித்தது.

அடுத்து விஷ்வராஜ் ஜடேஜா உடன் பிரேராக் மங்கட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. விஷ்வராஜ் ஜடேஜா தொடர்ந்து சதம் விளாசி, தொடர்ந்து விளையாடினார். அவர் 127 பந்தில் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க சவுராஷ்டிரா 39.3 ஓவரிலேயே 293 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரேராக் மங்கட் 49 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் சவுராஷ்டிரா நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் விதர்பாவை எதிர்கொள்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.