ஜனவரி 12ம் தேதி ஏன்?.. ஸ்கெட்ச் போடுகிறதா தணிக்கை வாரியம்?.. பரவும் செய்தி!…
நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் அவரின் கடைசியாக நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் ஜனவரி 9ம் தேதிதானே இன்று ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசிவரை சென்சார் தணிக்கை சான்றிதழ் கொடுக்கவில்லை என்பதால் படம் இன்று ரிலீஸாகவில்லை. இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அப்போது ராணுவம் தொடர்பான சில காட்சிகளை அனுமதி வாங்காமல் படக்குழு பயன்படுத்தியிருப்பதாக சென்சார் தணிக்கை வாரியம் புகார் சொன்னது. அதோடு படம் பார்த்த 5 பேரில் ஒருவர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் மறு தணிக்கை செய்ய வேண்டும். அதற்கு நான்கு வார கால அவகாசம் எனவும் தணிக்கை வாரியம் சொன்னது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 9ம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி இன்று காலை 10:30 மணிக்கு அவர் தீர்ப்பை வாசித்தார். அதில் ஜனநாயகன் படத்திற்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட யு/ஏ சான்றிதழை உடனடியாக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மறு தணிக்கைக்கும் அவர் தடை விதித்தார். எனவே, விஜய் ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.
அப்போது இன்று மதியம் 2:30 மணிக்கு இந்த வழக்கை விசாரிக்கிறோம் என நீதிபதிகள் சொன்ன போது, ஜனவரி 12ம் தேதி விசாரிக்க வேண்டும் என தணிக்கை வாரியம் கோரிக்கை வைத்தது. அதற்கு ‘இதை நீங்கள் முடிவு செய்ய முடியாது.. நீங்கள் மனு தக்கல் செய்யுங்கள்.. எப்போது விசாரணை என நாங்கள் முடிவு செய்வோம்’ என நீதிபதி தரப்பு சொன்னதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில்தான், இந்த வழக்கை 12ம் தேதி விசாரிக்க வேண்டும் என தணிக்கை வாரியம் ஏன் கேட்டது என்பதன் பின்னணி வெளியே கசிந்திருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு தொடர் விடுமுறை வருகிறது.
12ம் தேதி திங்கட்கிழமை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை என்றால் ஜனவரி 19ஆம் தேதிக்கு பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்படும். ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளியாகக் கூடாது என்கிற உள்நோக்கத்தில்தான் தணிக்கை வாரியம் இந்த வழக்கை 12ம் தேதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி வருகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


