Jana Nayagan Audio Launch: அடுத்த 33 வருஷத்துக்கு நன்றிக்கடனை தீர்த்துட்டுதான் போவேன்! - விஜய்
விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.
விஜய் பேசுகையில், "இலங்கைக்குப் பிறகு மலேசியா தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. நான் சினிமாவில் நடிக்க வரும்போது சிறிய மணல் வீடு கட்டதான் விரும்பினேன்.
ஆனா, என்னுடைய ரசிகர்கள் பெரிய கோட்டையே கட்டிக் கொடுத்திருக்காங்க. என்னுடைய கரியரின் முதல் நாளிலிருந்து பல அவமானங்களைச் சந்தித்திருக்கேன். என்னுடைய ரசிகர்கள் எனக்காக 33 வருஷமா பலவற்றைக் கொடுத்திருக்காங்க. அடுத்த 33 வருஷத்துக்கு நான் அவங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போறேன்.
எனக்கு ஒன்னுனா தியேட்டர் வாசல்ல வந்து நிக்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுனா, அவங்க வீட்ல போய் நிப்பேன்! எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்.

அதுக்காக நான் அவங்களுக்கு நன்றி மட்டும் சொல்லப் போறதில்ல. நன்றிக் கடனை தீர்த்துட்டுத்தான் போவேன். மலேசியாவின் தமிழ் சினிமா மார்க்கெட்டில் மிக முக்கியமானது.
நம்ம நண்பர் அஜித் நடிச்ச பில்லா படம் இங்க ஷூட் செய்ததுதான். என்னுடைய காவலன், குருவி படங்களை ஷூட் செய்ததும் இங்குதான். நான் அனிருத்துக்கு MDSனு பட்டம் கொடுக்கிறேன்.
அது மியூசிகல் டிபார்ட்மெண்டல் ஸ்டோர். உள்ளப் போனா, உங்களுக்கு பல பாடல்களும், பின்னணி இசையும் கிடைக்கும்." என்றவர், "மமிதா பைஜூ இளைஞர்கள் கொண்டாடும் டியூட் மட்டும் கிடையாது. இந்தப் படத்திலிருந்து அவங்க குடும்பங்கள் கொண்டாடும் சிஸ்டராகவும் மாறிடுவாங்க. என்னுடைய நல்ல ஃப்ரண்ட் அவங்க.
எப்போதுமே, ஹீரோ - ஹீரோயினுக்கு இடையிலதான் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும். ஆனா, கில்லி படத்துல இருந்து எனக்கும் பிரகாஷ் ராஜுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்திருக்கு.
என்னுடைய இயக்குநர் அ.வினோத் சமூக பொறுப்புள்ள இயக்குநர். கம்ர்ஷியல் சினிமாவாக இருந்தாலும் அதுல நல்ல சித்தாந்தத்தைக் கொண்ட விஷயங்களை பேசணும்னு நினைப்பாரு. முன்பே நாங்க படம் பண்ண வேண்டியதாக இருந்தது. அப்போ மிஸ் ஆகி இப்போ நடந்திருக்கு. பாபி தியோல் படங்கள்ல இருந்து இன்ஸ்பயராகி தான் ப்ரியமுடன் படத்தை எடுத்தோம். படப்பிடிப்பு தளத்துல அவர்கிட்ட உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய ரெண்டு படத்தை சுட்டுடோம்னு சொன்னோம். அவர் என்ன படம்னு கேட்டாரு. ஐயோ! நாமே வாயைக் கொடுத்து மாட்டிகிட்டோம்னு நினைச்சேம்." என்றார்.
மேலும் பேசிய விஜய், "நீங்க உங்க வாழ்க்கையில ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை.
ஆனா, உங்களுக்கு வலுவான ஒரு எதிரி தேவை. சும்மா, வர்றவங்க போறவங்களை எதிர்த்துட்டு இருக்க முடியாது இல்லையா! வலுவான எதிரி இருந்தால் மட்டுமே நீங்கள் வலிமையானவராக மாற முடியும்.
விஜய் தனியா வருவாரா, அணியாக வருவாரானு சமீபத்துல ஒரு பேச்சு வந்தது. நம்ம எப்போ தனியா இருந்திருக்கோம்.

33 வருஷமா மக்களோடதானே இருக்கேன். அது அணிதானே! இப்போ அணிங்கிறதை விளக்கமாகச் சொல்லமாட்டேங்குறார்னு தோணும்.
சஸ்பென்ஸ்னு ஒண்ணு இருந்தால்தானே கிக் இருக்கும். இதை மக்களுக்காகப் பேசுறேன். இதைவிட முக்கியம், செய்யுறதைதான் சொல்லணும். 2026, History Repeat Itself!" எனப் பேசினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

