Serial Rewind 2025: சர்ச்சை கிளப்பிய இவருக்குப் பதில் இவர், சங்கத்தை உடைத்த ஆளுங்கட்சி?
2025ல் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட சில முக்கிய சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.
ஒரே இழுவை.. ஓஹோனு வாழ்க்கை!
படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் சொந்த ஊரில் இருக்கும் அணைக்கட்டில் குளித்தபடி, ஏங்க, எங்க ஊருக்கு வாங்க எனத் தம் பிடித்து இழுத்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டார் விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் தங்கபாண்டி.
அடுத்த சில தினங்களில் தூக்கி வந்து சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் நடிகை சாந்தினியுடன் ஜோடி சேர்த்து விட்டது ஜீ தமிழ்.
அந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஒளிபரப்பான போதே நிச்சயம் இவருக்குத்தான் டைட்டில், பார்க்கலாமா எனப் பந்தயம் கட்டியவர்கள் பலர். கடைசியில் அது நடந்தே விட்டது.
நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆன தங்கபாண்டியன் சினிமா, கடை திறப்பு நிகழ்ச்சிகள் என இன்னும் கொஞ்ச நாளுக்கு பிசிதான்.
உள்ளே வெளியே ஆட்டம்!
இவருக்குப் பதில் இவர் என இந்தாண்டு நடந்த சில மாற்றங்கள் ரொம்பவே பேசப்பட்டன.
எதிர் நீச்சல் இரண்டாவது சீசனில் நடித்து வந்த நடிகை கனிகா தொடரிலிருந்து திடீரென வெளியேறினார்.
பர்சனல் காரணங்கள் என அவரே விருப்பப்பட்டு வெளியேறியதாக ஒரு சிலர் சொல்ல, தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கிடைக்காத அதிருப்தியில் வெளியேறினார் என்றனர் வேறு சிலர். இன்னும் சிலரோ வெளிநாட்டில் செட்டில் ஆகப் போகிறார் என்றார்கள்.

எது நிஜமெனத் தெரியவில்லை, ஆனால் சீரியலில் இருந்து வெளியேறிய அடுத்த மாதங்களிலேயே ஜீ தமிழ் சேனலில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஜட்ஜ்ஜாகப் போய் அமர்ந்து விட்டார்.
எதிர் நீச்சல் யூனிட்டோ இன்னும் அவரது கேரக்டருக்கு வேறு ஆர்ட்டிஸ்ட்டைக் கமிட் செய்ததாகத் தெரியவில்லை.
இன்னொரு ஆள் மாற்றத்தின் பின்னணியிலும் சர்ச்சை இருந்தது. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் தொடரில் ஹீரோவாக நடித்த சிபு சூர்யன் வெளியேற, அவருக்குப் பதில் ஸ்ரீ குமார் வந்தார்.
தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் சாயா சிங்குடன் சிபுவுக்கு ஏதோ பிரச்னை என்றார்கள். அவர் சீரியலில் தொடர்ந்தால், நான் வெளியேறி விடுகிறேன் என சாயா சிங் சொன்னதும், சிபு அனுப்பப்பட்டதாகக் கூறினார்கள்.
செய்திக்கே செய்தி!
ஊரில் நடப்பதையெல்லாம் நமக்குச் சொல்கிற செய்தி வாசிப்பாளர்களின் சங்கம் இரண்டு பட்டது இந்த ஆண்டில்தான். தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்தது. பிரபுதாசன் என்பவர் முயற்சியில் உருவான தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சங்கம் ஆரம்பத்தில் சுமூகமாக இயங்கியது.
ஒரு கட்டத்தில் உறுப்பினர்கள் சிலர் பிரபுதாசனைக் கேள்வி கேட்டதில் இரண்டு அணியாகப் பிரிந்தார்கள். பிரிந்த ஒரு சாரார் கூடி தேர்தலை அறிவித்து, அதில் வென்றவர்களை புதிய நிர்வாகிகளாக அறிவித்தனர்.

பிரபுதாசன் ஆதரவுத் தரப்போ, சங்கத்த்தின் அத்தனை ஆவணங்களும் எங்களிடமே இருக்கின்றன. அவர்கள் இந்தச் சங்கத்தின் பெயரையே பயன்படுத்தக் கூடாது. ஆனால் அமைச்சரைக் கூட்டி வந்து பதவி எற்பு விழா நடத்துகிறார்கள்.
இதிலிருந்தே சங்கம் பிளவுபட்டதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். நாங்கள் இதை இப்படியே விட மாட்டோம். சட்டப்படி சந்திக்க இருக்கிறோம் என்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
