152 ரன்களில் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா.. ஆனால் இங்கிலாந்தை 110 ரன்களுக்கு சுருட்டி சாதனை..!

 

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கிய இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான வரலாற்று சிறப்புமிக்க 4வது ஆசஸ் டெஸ்ட் போட்டி  கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஆட்டத்தின் முதல் நாளிலேயே இரண்டு அணிகளும் தங்களின் முதல் இன்னிங்சை முடித்து, 20 விக்கெட்டுகள் சரிந்தது இத்தொடரில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. வெறும் 45 ஓவர்களிலேயே அந்த அணி 152 ரன்களுக்கு சுருண்டது.

 

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணிக்கும் அதே கதிதான் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்திற்கு அதிர்ச்சி கொடுத்தனர். 

 

இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் மட்டுமே அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு போராடினார். இறுதியில் இங்கிலாந்து அணி 29.5 ஓவர்களில் 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 42 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

முதல் நாளின் இறுதி பகுதியில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

 

ஆடுகளத்தின் தன்மை மற்றும் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் காரணமாக ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் வீழ்ந்தது மெல்போர்ன் மைதானத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாக 46 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.