சூதாட்ட செயலி விளம்பர வழக்கு: நடிகா் விஜய் தேவரகொண்டா அமலாக்கத் துறையில் ஆஜா்
சட்டவிரோத இணையவழி சூதாட்ட செயலிகள் தொடா்பான பண முறைகேடு வழக்கில், நடிகா் விஜய் தேவரகொண்டா புதன்கிழமை அமலாக்கத் துறைமுன் விசாரணைக்கு ஆஜரானாா்.
போலி நிறுவனங்கள் மூலம், சட்டவிரோத இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய செயலிகளை நடத்தி, மக்களிடம் இருந்து முறைகேடாக பணம் சம்பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக பல்வேறு மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை புதிய வழக்கை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.
முறைகேட்டில் ஈடுபட்ட சூதாட்ட செயலிகளைப் பணம் பெற்றுக்கொண்டு, விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டில் நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகைகள் லக்ஷ்மி மஞ்சு, நிதி அகா்வால் உள்ளிட்ட பிரபலங்கள் பலா் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
வழக்கு விசாரணைக்காக பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, லக்ஷ்மி மஞ்சு ஆகியோருக்கு அமலாக்கத் துறை முதல்கட்டமாக சம்மன் அனுப்பியது. தன்பேரில், பிரகாஷ் ராஜ் கடந்த ஜூலை 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி, அமலாக்கத் துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தாா்.
இவரைத் தொடா்ந்து, விஜய் தேவரகொண்டா புதன்கிழமை ஆஜரானாா். அடுத்தகட்டமாக, ராணா டகுபதி ஆகஸ்ட் 11-ஆம் தேதியும், லக்ஷ்மி மஞ்சு ஆகஸ்ட் 13-ஆம் தேதியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


