IPL 2025: விதிகளை மீறினால் 5 போட்டிகளில் ஆட தடை? Demerit Points System Explained!

18 வது ஐ.பி.எல் சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில், பிசிசிஐ சில புதிய விதிமுறைகளை இப்போது அறிவித்திருக்கிறது. அதில், வீரர்களோ அணியின் பயிற்சியாளர் குழுவோ விதிகளை மீறினால் 5 போட்டிகள் வரைக்கும் தடை விதிக்கும்படி Demerit Points System என்ற விதியையும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

பிசிசிஐ

போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும் பயிற்சியாளர்களும் சில ஒழுங்கு நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு மைதானத்துக்குள் ஆவேச சொற்களில் பேசுவது மற்ற வீரர்களோடு சண்டையிடுவது போன்றவற்றை வீரர்கள் செய்யவே கூடாது. இதேமாதிரி, சில ஒழுங்கு நடைமுறைகள் இருக்கும். அதை மீறுபவர்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ரொம்பவே தீவிரமான ஒழுங்கு நடைமுறை மீறலாக இருந்தால் மட்டுமே போட்டியில் ஆடுவதற்கு தடை வரை விதிக்கப்படும். இப்போது பிசிசிஐ இதை ஒழுங்குப்படுத்தி Demerits Points System என கொண்டு வந்துள்ளது. அதன்படி ஒரு வீரர் விதியை மீறி செயல்பட்டால் அவருக்கு மதிப்புக் குறைவு புள்ளிகள் வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் வரைக்கும் இந்த மதிப்புக் குறைவு புள்ளிகள் உயிர்ப்போடு இருக்கும்.

அதன்படி அந்த மூன்று ஆண்டுகளுக்குள் 4-7 மதிப்புக்குறைவு புள்ளிகளை பெற்றிருந்தால் 1 போட்டியில் ஆட தடையும் 8-11 புள்ளிகளை பெற்றிருந்தால் 2 போட்டிகளில் ஆட தடையும், 12-15 புள்ளிகளை பெற்றிருந்தால் 3 போட்டிகளில் ஆட தடையும், அதற்கு மேல் போனால் 5 போட்டிகளில் ஆட தடையும் விதிக்கப்படும். இதுதான் Demerit Points System

இதுபோக வேறுசில புதிய நடைமுறைகளையும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அதாவது, கொரோனா சமயத்தில் வீரர்கள் பந்தில் எச்சில் தொட்டு தடவக்கூடாது என கண்டிப்பாக கூறப்பட்டிருந்தது. இப்போது அதற்கு விலக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

காற்றில் ஈரப்பதத்தின் தாக்கத்தினால் இரண்டாவதாக பந்துவீசும் அணி கடுமையாக பாதிக்கப்படுகிறது. பந்து ஈரமாகி பௌலர்கள் வீச நினைக்கும் லெந்தில் வீச முடியாமல் போகிறது. அதற்கு தீர்வு கட்டும் வகையில் இரண்டாவதாக பந்துவீசும் அணி 11 வது ஓவருக்கு மேல் விருப்பப்பட்டால் இரண்டாவதாக இன்னொரு பந்தை வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டிருக்கிறது. அந்த இரண்டாவது பந்து புதிய பந்தாக இருக்காது. ஓரளவு சேதமடைந்த பந்தாக இருக்கும்.

Shardul Thakur

அதேமாதிரி, நோ-பால் மற்றும் ஒயிடுக்கு எடுக்கப்படும் ரிவியூவ்க்களின் போது ஹாக் - ஐ, பால் டிராக்கிங் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் எனவும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.