IND vs AUS: ``ஸ்மித்தின் கட்டம் சரியில்லை; இந்திய வீரர்களின் கிரக நிலை..? - ஜோதிடர் லோபோ கணிப்பு
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இன்று அரையிறுதியில் மோதுகிறது. அதுவும், இரு அணிகளும் 25 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி நாக்அவுட் சுற்றில் மோதுகிறது. இதற்கு முன்னர், 2000-ம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி காலிறுதியில் இந்த இரு அணிகளும் மோதின. அதில், ஆஸ்திரேலியாவை இந்தியா எளிதாக வீழ்த்தியது. ஆனால், இன்றைய சூழல் அப்படியில்லை. சமீப காலங்களில் ஐ.சி.சி நாக்அவுட் சுற்றுகளில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா சற்று தலைவலியாகவே இருக்கிறது, குறிப்பாக டிராவிஸ் ஹெட்.
இப்போது இந்தியாவுடன் மோதும் ஆஸ்திரேலிய அணி, கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத B டீமாக இருந்தாலும் அணியை வழிநடத்துவது ஸ்டீவ் ஸ்மித். அவருக்குப் பலமாக டிராவில் ஹெட், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்க்லிஷ், ஆடம் சாம்பா போன்றோர் இருக்கின்றனர். அதேசமயம், இந்திய அணியும் சவால் அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடிய அதே இந்திய அணிதான். பும்ரா மட்டும்தான் மிஸ்ஸிங். எனவே, இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் சவாலானதாகவே இருக்கும்.
இந்த நிலையில், 1989-ல் பிறந்த ஸ்டீவ் ஸ்மித்துக்கு கிரக நிலை சரியில்லாததால் ஆஸ்திரேலியா இப்போட்டியை வெல்வது கடினம், இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என்றும் அஸ்ட்ராலஜர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்திருக்கிறார்.
2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறும் என்று கணித்திருந்த லோபோ இன்றைய போட்டி குறித்து பேசுகையில், ``ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் இல்லாதது அவர்களுக்கு பெரும் இழப்பு. ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ஷ்டமான கேப்டன் அவர். 1993-ல் நெப்டியூன் மற்றும் புளூட்டோ மிகவும் வலுவான நிலைகளில் இருந்தபோது அவர் பிறந்தார்.

இந்தத் தொடரில் உள்ள அனைத்து வீரர்களையும் விட சிறந்த ஜாதகத்தை அவர் பெற்றிருக்கிறார். அவர் இந்த அணியில் விளையாடாதது இந்தியாவுக்கு சாதகம். மேலும், அணியைத் தற்போது வழிநடத்தும் 1989-ல் பிறந்த ஸ்டீவ் ஸ்மித்தின் ஜாதகத்தில் இருக்கும் மிகப்பெரிய சவால் இருக்கிறது, அது என்னவென்றால், முதல் மூன்று கிரகங்களில் யுரேனஸ், புளூட்டோ பலவீனமான கட்டங்களில் இருக்கிறது. போட்டியை அவர் வெல்வதற்கான கிரக ஆதரவு அவருக்கு இல்லை. ஆஸ்திரேலியா செய்த மிகப்பெரிய தவறு டிராவிஸ் ஹெட்டை கேப்டனாக நியமிக்காததுதான். அவர்கள் அவ்வாறு செய்திருந்தால், இந்தியா மிகவும் கடினமான சவாலை எதிர்கொண்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக, அது நடக்கவில்லை.

மறுபுறம், ரோஹித் சர்மா ஒரு சிறந்த ஜாதகத்தைக் கொண்டிருக்கிறார். 1980-களுக்குப் பிறகு பிறந்த அனைத்து வீரர்களிலும் தோனிக்கு அடுத்து சிறந்த கட்டங்களை அவர் கொண்டுள்ளார். ஜோதிடக் கண்ணோட்டத்தில் இந்திய வீரர்களின் கிரக நிலைகள் தற்போது நன்றாக இருக்கிறது. ஜோதிட ரீதியாக இந்திய அணி மிகவும் சமநிலையில் இருக்கிறது. எனவே, இம்முறை இந்தியா வீரர்கள் வாய்ப்பை நழுவ விட மாட்டார்கள்." என்று தெரிவித்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


