ரெக்கார்டு பிரேக்குக்காக கண்டிஷன் போட்டு நடித்த எம்ஆர்.ராதா... அது சூப்பர்ஹிட் படமாச்சே!
தமிழ்த்திரை உலகில் நடிகவேள் என்று அழைக்கப்படுபவர் எம்.ஆர்.ராதா. தன் படங்களில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை நகைச்சுவை கலந்து ஸ்டைலாக சொல்வதில் வல்லவர். இவர் பேசும் டயலாக் டெலிவரி நமக்கே ஆச்சரியமாகத் தோன்றும். உன்னிப்பாகக் கவனித்தால் தான் தெரியும். 3 விதமான குரலில் டயலாக் பேசுவார். இவரது பேச்சை மிமிக்ரி கலைஞர்கள் மேடையில் ஆர்வத்துடன் பேசிக்காட்டி கைதட்டல்களைப் பெறுவார்கள்.
வில்லத்தனம்: எம்ஆர்.ராதாவைப் பொருத்தவரை சினிமாவில் பெரும்பாலும் வில்லனாக நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் இவர் காட்டும் வில்லத்தனம் பார்ப்பதற்கே அட்டகாசமாக இருக்கும். அந்தவகையில் அவர் ஹீரோவாக நடித்த படம் ஒன்று பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியுள்ளது. அது என்ன படம்? அந்தப் படத்தில் எப்படி நடித்தார்? அதற்காக அவர் தயாரிப்பாளருக்கு போட்ட கண்டிஷன் என்னன்னு பார்க்கலாமா...
கண்டிஷன்: தமிழ்சினிமாவில் முதல் ஒரு லட்சம் ரூபாய் என்று சம்பளம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள். அதே போல அவரை விட அதிகமாக சம்பளமாக வாங்கிய முதல் நடிகர் என்றால் அது எம்.ஆர்.ராதா. கேபி.சுந்தராம்பாளுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தீர்களோ அதைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கொடுத்தால்தான் இந்தப் படத்தில் நடிப்பேன் என்று எம்ஆர்.ராதா திட்டவட்டமாக சொன்னார். அதனால் அவர் கேட்டபடி ஒருலட்சத்து 10 ஆயிரம் ரூபாயை தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் சம்பளமாகக் கொடுத்தார்.
எம்ஆர்.ராதாவின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பெருமாள் முதலியார் தயாரித்த திரைப்படம்தான் ரத்தக்கண்ணீர். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ரத்தக்கண்ணீர்: 1954ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் பி.ஏ.பெருமாள் முதலியார் தயாரிக்க எம்.ஆர்.ராதா நடித்த படம் ரத்தக்கண்ணீர். இவருடன் இணைந்து எஸ்எஸ்.ஆர்., சந்திரபாபு, ஸ்ரீரஞ்சனி, எம்என்.ராஜம், எஸ்.ஆர்.ஜானகி, அங்கமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர்.
தொழுநோயாளி: படத்தில் எம்ஆர்.ராதா தொழுநோயாளியாக தத்ரூபமாக நடித்துள்ளார். முதல் பாதியில் மேல்நாட்டு நவநாகரீக இளைஞனாக அசத்தலாக நடித்து இருப்பார். இரண்டாம் பாதியில் தொழுநோயாளியாக நடித்து அனைவரின் பரிதாபத்தையும் அள்ளிவிடுவார். படத்தில் இவர் பேசும் டயலாக்குகள் ஒவ்வொன்றும் இப்போது வரை ட்ரெண்ட் ஆகி வருகிறது. படத்திற்கு சிஎஸ்.ஜெயராமன் இசை அமைத்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

