திட்டிய கண்ணதாசனையே பாராட்ட வைத்த எம்.ஜி.ஆர்!.. இது செம மேட்டரா இருக்கே!..

MGR: பழுத்த பழமே கல்லடி படும் என சொல்வது போல திரையுலகில் 60 முதல் 70 வரை அதிக பிரச்சனைகளையும், விமர்சனங்களையும் பார்த்தவர் எம்.ஜி.ஆர். இவருக்கு பல எதிரிகள் இருந்தார்கள். அரசியல், சினிமா என இரண்டு துறையிலும் அவரை பிடிக்காதவர்கள் இருந்தார்கள். ஆனால், சினிமா, அரசியல் என இரண்டிலுமே அவரை யாராலும் அசைக்க முடியவில்லை.

தயாரிப்பாளர்களின் கைகளில் இருந்த சினிமாவை எம்.ஜி.ஆர் தனது கைகளில் கொண்டு வந்தார். யார் தயாரிப்பாளர், யார் இயக்குனர், யார் நடிகை, யார் காமெடி நடிகர் என எல்லாவற்றையும் ஹீரோவே முடிவெடுக்கும் டிரெண்டை துவங்கி வைத்தவர் அவர்தான். அவர் சொன்னால் மறு பேச்சு யாரும் பேசமாட்டார்கள்.


ஏனெனில் அந்த அளவுக்கு திரையுலகில் தனது ஆளுமையை பரப்பியிருந்தார் எம்.ஜி.ஆர். துவக்கத்தில் எம்.ஜி.ஆருடன் நட்பாக இருந்த கவிஞர் கண்ணதாசன் ஒரு கட்டத்தில் அவருக்கு எதிரியாக மாறினார். அதற்கு காரணம் இருவருக்கும் இருந்த அரசியல் தொடர்பான பார்வை. எம்.ஜி.ஆர் திமுகவை ஆதரித்தார். கண்ணதாசனோ காமராஜர் மீது இருந்த பற்றில் காங்கிரஸை ஆதரித்தார்.

பல அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆரை திட்டி பேசியிருக்கிறார் கண்ணதாசன். அதற்கு நாகரீகமாக பதிலடி கொடுத்தார் எம்.ஜி.ஆர். தன்னை திட்டிய யாரையும் எம்.ஜி.ஆர் வெறுத்ததே இல்லை. மாறாக அவர்களிடம் அன்பு காட்டி அவர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது அதை செய்தும் இருக்கிறார். கண்ணதாசனே கடனில் சிக்கி அவரின் வீட்டை இழக்கும் நிலையில் இருந்த போது எம்.ஜி.ஆர் அதை மீட்டு தந்தார்.


எம்.ஜி.ஆரின் இராமாபுரம் தோட்டத்தில் அவரிடம் உதவி கேட்க மக்கள் பலரும் வருவார்கள். ஒருநாள் பெண்கள் நின்று கொண்டிருந்த வரிசையில் அமைச்சர் கக்கனின் மனைவி நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ந்து போன எம்.ஜி.ஆர் அவரை அழைத்து விசாரித்தார். வீட்டு வசதி வாரியத்தில் குடியிருந்த கக்கன் பல மாதங்கள் வாடகையை செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். அதனால் வீட்டை காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர் கக்கன் மனைவியிடம் தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்து அவரை தனது காரில் அவரின் வீட்டிக்கு அனுப்பி வைத்தார். உடனே தனது சொந்த பணத்தில் கக்கன் குடியிருந்த வீட்டு வாடகை பாக்கியை முழுவதும் கட்டினார். அதோடு, கக்கனுக்கு தனது சொந்த செலவில் ஒரு வீட்டை கட்டிக்கொடுத்தார். ஒருமுறை அரசு மருத்துவமனையில் சாதாரண வார்டில் கக்கன் சிகிச்சை பெறுவதை தெரிந்துகொண்டு அவருக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார். அதோடு, பதவியிழந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 500 ரூபாய் ஓய்வூதியம் பெற அரசாணை பிறப்பித்தார்.

இதனால் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சனம் செய்து வந்த கண்ணதாசனே அவரை பாராட்டி பேசினார். காமராஜர் ஆட்சியில் கக்கன் அமைச்சராக இருந்தவர். நேர்மையான அரசியல்வாதி என பெயரெடுத்தவர். பதவியை துறந்தபின் அரசு பேருந்தில் பயணித்தவர். மிகவும் எளிமையானவர். இதெல்லாம் தெரிந்துதான் எம்.ஜி.ஆருக்கு அவருக்கு உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.