தமிழ் சினிமாவில் ஏ சான்றிதழ் பெற்ற முதல் திரைப்படம் எது தெரியுமா?.. நம்ம எம்ஜிஆர் நடிச்சதா?..
Marmayogi : சினிமாவைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுகின்றது என்றால் அந்த திரைப்படத்தில் அதிக வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் இருக்கின்றது என்பது அர்த்தமாகும். தமிழ் சினிமாவில் தற்போது பல திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் இருக்கின்றன. இது போன்ற திரைப்படங்களை குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.
ஆனால் 20 வருடத்திற்கு முன்பு திரைப்படங்களில் இது போன்ற வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் அதிகம் இல்லை. ஏ சான்றிதழ் வழங்கப்படும் திரைப்படங்களை பார்ப்பதற்கு பெருமளவு மக்கள் அப்போதெல்லாம் யோசித்து வந்தார்கள். இப்போது அது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் 1951இல் ஒரு திரைப்படம் ஏ சான்றிதழ் வாங்கி இருக்கின்றது.
அப்படி அந்த திரைப்படத்திற்கு எதற்காக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதற்கான காரணம் என்ன என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழில் முதன்முதலாக ஏ சான்றிதழ் வாங்கிய திரைப்படம் என்றால் அது எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த மர்மயோகி திரைப்படம் தான். 1947 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜகுமாரி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் எம்ஜிஆர்.
அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த அசத்தி வந்த இவர் மர்மயோகி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் எம்ஜிஆர், அஞ்சலிதேவி, பண்டரிபாய், எம் என் நம்பியார், ஜாபர், சீதாராமன், எஸ் வி சகஸ்ரநாமம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். கே.ராம்நாத் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
படத்தின் கதை: ஒரு நாட்டின் மன்னனை தன் கை பாவையாக வைத்துக் கொண்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகிறாள் மன்னனின் ஆசை நாயகி. இளவரசன் கரிகாலன் நாடு கடத்தப்படுகிறான். கரிகாலன் மக்களை திரட்டி நாட்டை மீட்பதற்கு போராடுகின்றான். இதற்கு இடையில் மர்மயோகி என்ற ஒரு உருவம் ஆட்சியை எதிர்த்து போராடுகின்றது. இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
ஏ சான்றிதழ்: ஆங்கிலேயர் நாட்டை விட்டு சென்றதற்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட தணிக்கை குழு இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது. மர்மயோகியாக நடித்திருப்பவர் பல காட்சிகளில் ஆவியாக வந்து எல்லோரையும் மிரட்டுவார். இந்த காட்சியை சிறுவர்கள் பார்த்தால் அவர்கள் பயந்து விடுவார்கள் .
மேலும் அவர்களுக்கு மனரீதியான பிரச்சினை ஏற்படும் என்று கூறி இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கினார்களாம். அதேபோல இந்த திரைப்படம் தான் அடல்ஸ் ஒன்லி என விளம்பரம் செய்யப்பட்ட முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


