Australia: டெஸ்ட் அணி ஓப்பனிங் ஸ்லாட் தலைவலியில் ஆஸ்திரேலியா; மீண்டும் விளையாட விரும்பும் வார்னர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஷஸ் தொடரைப் போல மற்றொரு பிரபல தொடர் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர். 1996-97 முதல் நடத்தப்பட்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை இந்தியாவின் கைகளே ஓங்கியிருக்கிறது. தற்போது வரை நடந்து முடிந்திருக்கும் 16 தொடர்களில் 2003-04ல் நடைபெற்ற தொடர் மட்டுமே டிரா ஆகியிருக்கிறது. மற்றபடி, இந்தியா 10 தொடர்களையும், ஆஸ்திரேலியா 5 தொடர்களையும் வென்றிருக்கின்றன.
இதில், 2016-17 முதல் இந்தியா மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதனால், அடுத்த மாதம் தனது சொந்த மண்ணில் நடைபெறவிருக்கும் இத்தொடரை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என நடப்பு டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியா முனைப்பு காட்டிவருகிறது. இம்முறை, இரு அணிகளுக்குமிடையே முதல்முறையாக 5 டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும், இந்தத் தொடரின் வெற்றி தோல்வி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இரு அணிகளும் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இப்படியான முக்கியமான சூழலில், உஸ்மான் கவாஜாவுடன் யாரை ஓப்பனிங் இறக்குவது என்பதில் ஆஸ்திரேலியா பெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கிறது. மேலும், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலிய அணிக்குப் பல ஆண்டுகளாக ஓப்பனிங்கில் சிறப்பாகச் செயல்பட்டுவந்த டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு, டெஸ்ட் போட்டிகளில் அவரின் இடத்தை அவரளவுக்கு நிரப்புவதில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் திணறிவருகிறது.

இந்தாண்டு ஜனவரியில் டெஸ்ட்டிலிருந்து வார்னர் ஓய்வுபெற்ற பிறகு, 4-வது இடத்தில் ஆடிக்கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் ஓப்பனிங்கில் களமிறக்கப்பட்டார். ஸ்மித்தின் இடத்தில் கேமரூன் கிரீன் இறக்கப்பட்டார். இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் 32 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்மித்தால் ஓப்பனிங்கில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. மறுபக்கம், கேமரூன் கிரீன் தற்போது காயத்தால் அவதிப்படுவதால், இந்தியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஸ்மித்தை அவரின் பழைய இடத்தில் இறக்குவதே அணிக்கும் நல்லது என நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகப் பேச்சுகள் அடிபடுகிறது. இதனால், உஸ்மான் கவாஜாவுடன் யார் ஓப்பனிங் இறக்குவது என்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.
இவ்வாறான சூழலில், இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் களமிறங்க தயாராக இருப்பதாக வார்னர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேட்டியொன்றில் பேசியிருக்கும் வார்னர், ``நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். இப்போது அவர்களின் செல்போன் அழைப்பை எடுக்க வேண்டும். உண்மையில், ஆஸ்திரேலிய அணி கடைசியாகப் பிப்ரவரியில் டெஸ்ட் ஆடியிருந்தது. நானும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன்.

இந்தத் தொடருக்கு அவர்களுக்கு நான் தேவைப்படும் பட்சத்தில், அடுத்த ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் விளையாடி, இந்தியாவுடன் விளையாடுவதில் எனக்கு மகிழ்ச்சிதான். என்னுடைய ஆட்டத்தை முடித்துக்கொள்வதற்கான சரியான காரணங்களுக்காக நான் ஒய்வு பெற்றேன். இருப்பினும், அவர்களுக்கு நான் தேவைப்பாட்டால், என்னுடைய கை எப்போதும் முன்னிருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
ஓய்விலிருந்து மீண்டும் வரும் விதமாக வார்னர் இவ்வாறு பேசியிருப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ஏனெனில், இதுவரை எந்தவொரு ஆஸ்திரேலிய வீரரும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் சர்வதேச போட்டிகளில் ஆடியதில்லை. அதனால், டேவிட் வார்னர் தயாராக இருப்பதாகக் கூறினாலும், ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அவரை விளையாட வைக்கத் தயாராக இருக்குமா என்பது சந்தேகம்தான்.

இப்போதைக்கு, உஸ்மான் கவாஜாவுடன் ஓப்பனிங் இறக்க, கேமரூன் பான்கிராஃப்ட், சாம் கான்ஸ்டாஸ், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் இங்லிஸ் ஆகியோரை ஆஸ்திரேலியா சாய்ஸில் வைத்திருப்பதாகவும் பேசப்படுகிறது. எனவே ஆஸ்திரேலிய அணி எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
வார்னரை ஆஸ்திரேலிய அணி அழைக்குமா என்பது குறித்த உங்களின் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


