Ind Vs Nz : ``46 ஆல் அவுட்டுக்கு நானே பொறுப்பு! - என்ன சொல்கிறார் கேப்டன் ரோஹித்?
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உள்ளூர் மைதானங்களில் இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை எடுத்திருந்தது. அவர்கள் இப்போதே 134 ரன்கள் முன்னிலையைப் பெற்றுவிட்டார்கள்.
இந்நிலையில், இன்றைய நாள் ஆட்டம் முடிந்தவுடன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார். அங்கே பேசுகையில் இந்தியாவின் மோசமான ஆட்டத்துக்கு கேப்டனாக தான் எடுத்த முடிவுகள்தான் காரணம் என வெளிப்படையாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு பேசி கவர்ந்திருக்கிறார்.
ரோஹித் பேசுகையில், "பிட்ச்சில் புற்கள் இல்லாமல் இருந்தது. இதனால் வழக்கமான இந்திய பிட்ச்சாக இருக்கும் என நினைத்தோம். இந்திய மைதானங்களில் முதல் செஷன் எப்போதும் கடினமாகத்தான் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு இருக்கும். முதல் செஷனுக்கு பிறகு திரும்ப ஆரம்பிக்கும். இந்த மைதானத்தையும் பிட்ச்சையும் கூட அப்படித்தான் நினைத்தோம். பிட்ச் ப்ளாட்டாக இருக்கும் என்று நினைத்ததால்தான் குல்தீப் யாதவ்வை அணியில் எடுத்தோம். பிட்ச்சை தவறாக புரிந்துகொண்டோம்.
குறிப்பாக, நான் பிட்ச்சை தவறாக கணித்துவிட்டேன். அதனால்தான் இந்த நிலைமையில் இருக்கிறோம். ஒரு கேப்டனாக 46 என்கிற ஸ்கோரை பார்க்கையில் கஷ்டமாகத்தான் இருக்கிறது. முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது எல்லா சமயமும் அது சரியான ரிசல்ட்டையும் கொடுக்காது. 365 நாள்களில் இரண்டு மூன்று சமயங்களில் நம்முடைய முடிவுகள் தவறித்தான் போகும். அப்படி நடப்பதை தவிர்க்கவும் முடியாது. டாஸ் முடிவு தவறாக போனதில் எனக்கும் வருத்தம்தான். நியூசிலாந்துக்கு நிறைய ரன்களை கொடுத்துவிட்டோம். இப்போதே அவர்கள் 140 ரன்களுக்கு நெருக்கமாக முன்னிலையில் இருக்கிறார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

சில சமயங்களில் அனுபவமிக்க வீரர்கள்தான் கூடுதல் பொறுப்பை சுமக்க வேண்டியிருக்கும். கில் அணியில் இல்லை. நம்பர் 3 இல் யாரை இறக்கலாம் எனும்போது நாங்கள் கோலியிடம் சென்றோம். கோலியும் அந்த பொறுப்பை ஏற்க தயாராக இருந்தார். கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சர்ப்ராஸ் கான் ஆகியோரை அவர்களுக்கு ஏற்ற ஆர்டரில்தான் ஆட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால்தான் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்தோம்." என்று தெரிவித்தார்.
ரோஹித்தின் தலைமைத்துவத்தைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

