INDvNZ : 0,0,0,0 - 4 வீர்ரகள் டக்; சுதாரிக்காத ரோஹித்; கோலி - பெங்களூருவில் தடுமாறும் இந்தியா
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று மழையினால் ஆட்டம் முழுமையாக தடைப்பட்டிருந்தது. இன்றுதான் போட்டி தொடங்கியது. முதல் செஷனிலேயே இந்திய அணி கடுமையாக திணறி வருகிறது. முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே ரோஹித், கோலி உட்பட இந்தியாவின் டாப் ஆர்டர் மொத்தமாக காலியாகியிருக்கிறது.
ரோஹித்தான் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்திருந்தார். இந்த முடிவே கொஞ்சம் விமர்சிக்கப்பட்டது. நேற்று முழுவதும் மழை பெய்திருக்கிறது. இன்றும் மழைக்கான சூழல் இருக்கிறது. அப்படியிருக்க பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அம்சங்கள் வெளிப்படக்கூடும். அதனால் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்திருக்கலாம் என விமர்சிக்கப்பட்டது. அதற்கேற்றார் போலத்தான் இந்தியாவின் தொடக்கமும் இருந்தது. டிம் சவுதி, மேட் ஹென்றி, வில்லியம் ரூர்கி என நியூசிலாந்தின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் பந்தை உள்ளும் வெளியுமாக திருப்பி திணறடித்தனர். சவுதி வீசிய முதல் ஓவரிலேயே புதிய பந்தில் கோலோச்ச போகிறார்கள் என்பது தெரிய வந்துவிட்டது. ஆனாலும், இந்திய பேட்டர்கள் சுதாரித்துக் கொள்ளவே இல்லை.
மூன்று ஸ்லிப், கல்லி, லெக் கல்லி என டைட்டாக பீல்ட் செட்டப்பையும் வைத்து தீவிரமாக அட்டாக் செய்தார்கள். முதல் 10-15 ஓவர்களுக்கு ஒன்றுமே செய்யாமல் பௌலர்களை மதித்து பேட்டர்கள் பொறுமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடமே அந்த பக்குவம் இல்லை. முதல் பந்திலிருந்தே ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கும் பேட்டை விட்டுக் கொண்டேதான் இருந்தார். சில பந்துகளில் அடிக்கலாமா வேண்டாமா என்கிற அரைகுறை மனதோடு பேட்டை விட்டு தடுமாறவும் செய்தார். சூழலை புரிந்துகொண்டு ஆடாததால் சீக்கிரமே அவுட்டும் ஆகினார். சவுதியின் பந்தில் ஸ்விங்கை தவிர்க்கும் விதமாக இறங்கி வந்து ஆடுகிறேன் என்ற பெயரில் காற்றில் சுழன்று வந்து (Wobbble Seam) உள் பக்கமாக திரும்பிய ஆங்கிள் இன் டெலிவரியை கணிக்க தவறி லெக் ஸ்டம்பை பறிகொடுத்து இரண்டே ரன்களில் வெளியேறினார்.

நம்பர் 3 இல் விராட் கோலி களமிறங்கினார். டெஸ்ட்டில் நம்பர் 4 தான் விராட் கோலியின் ஆஸ்தான இடம். கில் இந்தப் போட்டியில் இல்லை என்பதால் அவருக்குப் பதில் எடுக்கப்பட்ட சர்ப்ராஸை நம்பர் 3 இல் இறக்காமல் விராட் கோலியை அங்கே இறக்கினார்கள். ஆனால், இந்த முடிவும் தவறாகவே மாறிப்போனது. நேரலையில் வர்ணனையிலேயே ஹர்ஷா போக்ளே இந்த முடிவை விமர்சித்தார். இந்த இந்திய அணியில் இப்போதைக்கு அதிகமாக புதிய பந்துகளை எதிர்கொண்டிருப்பது கே.எல்.ராகுல்தான். 77 போட்டிகளில் புதிய பந்துகளை அவர் எதிர்கொண்டிருக்கிறார். அவர் அளவுக்கு வேறு யாரும் அனுபவம் கொண்டிருக்கவில்லை. கே.எல்.ராகுலை இப்போது மிடில் ஆர்டருக்கான ஆப்சனாகத்தான் பார்க்கிறார்கள். ஆனாலும் சூழலை மனதில் வைத்து அவரை டாப் ஆர்டரில் இறக்கியிருக்கலாமே. என்றார்.
ரோஹித்திடம் இல்லாத பக்குவம் விராட் கோலியிடம் இருந்தது. எந்த பந்துக்கும் அவசரப்பட்டு பேட்டை விட அவர் விரும்பவில்லை. முதல் 3 பந்துகளையும் எந்த தொந்தரவும் செய்யாமல் அப்படியே லீவ் செய்தார். அடுத்தும் அதே நிதானத்தோடுதான் இருந்தார். ஆனாலும் வில்லியம் ரூர்கி டைட்டான லைனில் வீசி கோலியை ஆட வைத்து ஆக்கினார். லெக் கல்லி வைத்துவிட்டு ஆங்கிள் இன் டெலிவரியாக ஒரு பந்தை வீசினார். குட் லெந்தில் விழுந்த அந்த பந்து கோலி எதிர்பாராததை விட அதிகமாக பவுன்ஸ் ஆகவே எட்ஜ் ஆகி அந்த லெக் கல்லியிடமே கேட்ச் ஆனார். 9 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன்னை கூட கோலி எடுக்கவில்லை. டக் அவுட்.

நம்பர் 4 இல் சர்ப்ராஸ் கான் வந்தார். அவருக்கு என்ன அவசரமோ புரியவில்லை. வந்த வேகத்திலேயே அட்டாக் செய்ய முயன்று மூன்றே பந்துகளில் டக் அவுட் ஆனார். மூன்று ஸ்லிப்கள், கல்லி, பாய்ண்ட், கவருக்கும் மிட் ஆப்க்கும் இடையில் ஒரு பீல்டர் என சர்ப்ராஸின் மனதை படித்ததை போல நியூசிலாந்து கேப்டன் ஒரு பீல்ட் செட்டப்பை வைத்திருந்தார். சரியாக மூன்றாவது பந்தில் தேவையே இல்லாமல் ஒரு ஷாட்டை ஆடி அந்த கவருக்கும் மிட் ஆப்புக்கும் இடையில் நின்ற கான்வேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முதல் 10 ஓவருக்குள்ளேயே இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆயினும் இன்னொரு முனையில் ஜெய்ஸ்வால் சூழலை உணர்ந்து மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். Following the ball அதாவது பந்தை விரட்டிக் கொண்டு செல்லுதல். டெஸ்ட் போட்டிகளில் பேட்டர்கள் பந்தை விரட்டிக் கொண்டு செல்லக்கூடாது. ஷாட் ஆடுவதற்கான லெந்தில் வாட்டமாக வீசி பௌலர்கள் ஆசை காட்டுவார்கள். அதை பொருட்படுத்தவே கூடாது. ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு பேட்டை விடவே கூடாது. ஸ்ட்ரைட்டாக ஸ்டம்ப் லைனில் வரும் பந்துகளை மட்டும் தற்காப்பாக டிபன்ஸ் செய்ய வேண்டும். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படை.

இதை ஜெய்ஸ்வால் கச்சிதமாக உணர்ந்து ஒரு கட்டம் வரைக்கும் சிறப்பாக ஆடினார். 62 பந்துகளுக்கு அவரிடம் இருந்த நிதானம் 63 வது பந்தில் இல்லை. ரூர்கி ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை பாயிண்ட்டில் பவுண்டரியாக்க முயன்று கல்லியில் கேட்ச் ஆகினார். இன்னொரு முனையில் ரிஷப் பண்ட்டும் ஜெய்ஸ்வாலை போல ஆட முயன்றாலும் திடீரென அவருக்குள் இருக்கும் ஸ்பைடர்மேன் வெளியே வந்துவிடுகிறார். ரூர்கியின் பந்தில் பேட்டைவிட்டு விக்கெட் கீப்பர் ப்ளண்டலுக்கு எளிய கேட்ச் ஒன்றையும் கொடுத்தார். அதை அவர் தவறவிட்டதால் தப்பித்து தொடர்ந்து ஆடி வருகிறார். நம்பர் 6 இல் ராகுல் களமிறங்கி அவரும் டக் அவுட்டாகி வெளியேற, ஜடேஜாவும் வந்த வேகத்தில் நடையைக்கட்ட 23.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 34 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. இந்திய அணியின் 4 வீரர்கள் டக் அவுட்டாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

