போலந்தை வீழ்த்தியது இந்தியா
ஓமனில் நடைபெறும் ஹாக்கி ஃபைவ்ஸ் மகளிா் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 5-4 கோல் கணக்கில் போலந்தை புதன்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவுக்காக மும்தாஸ் கான் (4’) கோலடிக்க, தொடா்ந்து தீபிகா அடித்த கோலால் (6’) இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் குசாா்ஸ்கா ஜூலியா (8’), ரைபாசா மா்லேனா (10’) ஆகியோா் போலந்துக்காக அடித்த கோலால் ஆட்டம் சமன் ஆனது.
அதற்கு பதிலடியாக மும்தாஸ் கான் 14-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை மீண்டும் முன்னிலை பெறச் செய்தாா். தொடா்ந்து குஜுா் மரியானா 23-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால் இந்தியா 4-2 என முன்னேற்றம் பெற்றது. விடாமல் போராடிய போலந்து தரப்பில் ஸ்லாவின்ஸ்கா பௌலா (27’), போலியுஸாக் மோனிகா (29’) கோலடித்து மீண்டும் 4-4 என ஆட்டத்தை சமன் செய்தனா்.
இதையடுத்து ஆட்டம் பரபரப்பாக, இந்தியாவின் தீபிகா அதே 29-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, இறுதியில் இந்தியா 5-4 கோல் கணக்கில் வென்றது. குரூப் ‘சி’-யில் இருக்கும் இந்தியா, அடுத்த ஆட்டத்தில் அமெரிக்காவை சந்திக்கிறது.
இந்தியா - பிரான்ஸ் ‘டிரா’: தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 4 நாடுகள் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி 2-ஆவது ஆட்டத்தில் பிரான்ஸுடன் 2-2 கோல் கணக்கில் டிரா செய்தது.
இதில் இந்தியாவுக்காக மன்தீப் சிங் (8’), அமித் (19’) ஆகியோா் கோலடிக்க, பிரான்ஸ் தரப்பில் டிமதி கிளெமன்ட் (37’), கஸ்பாா்ட் (59’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.
அடுத்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது இந்தியா.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


