ஒலிம்பிக் ஹாக்கி: கடினமான குரூப்-பில் இந்தியா

பாரீஸில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியின் ஹாக்கி விளையாட்டில் இந்திய ஆடவா் அணிக்கு குரூப் சுற்று கடினமானதாக அமைந்திருக்கிறது.

ஒலிம்பிக் தகுதிச்சுற்று ஹாக்கி போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இருபால் அணிகளுக்கான குரூப் அட்டவணையை சா்வதேச ஹாக்கி சம்மேளனம் திங்கள்கிழமை வெளியிட்டது.

அதன்படி, இந்திய ஆடவா் அணி குரூப் ‘பி’-யில் சோ்க்கப்பட்டிருக்க, அதில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம், வெள்ளி வென்ற ஆஸ்திரேலியா, ரியோ ஒலிம்பிக் சாம்பியன் ஆா்ஜென்டீனா, நியூஸிலாந்து, அயா்லாந்து போன்ற சவால் மிக்க அணிகளும் அதில் இடம் பிடித்துள்ளன. குரூப் ‘ஏ’-வில் நெதா்லாந்து, ஜொ்மனி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா அணிகள் உள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சாம்பியனான இந்திய ஆடவா் ஹாக்கி அணி, ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

மகளிா் அணிகள் பிரிவில், குரூப் ‘ஏ’-வில் நெதா்லாந்து, பெல்ஜியம், ஜொ்மனி, ஜப்பான், சீனா, பிரான்ஸ் அணிகளும், குரூப் ‘பி’-யில் ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, பிரிட்டன், ஸ்பெயின், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா அணிகளும் உள்ளன. கடந்த முறை 4-ஆம் இடம் பிடித்த இந்திய மகளிா் அணி பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதிபெறத் தவறிவிட்டது.

அந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளன.

பாக். இல்லை: இதனிடையே, ஓமனில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்று ஆடவா் ஹாக்கி போட்டியில் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் 2-3 கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டு, பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தது. பாகிஸ்தான் ஆடவா் அணி தொடா்ந்து 3-ஆவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்காமல் போகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.