டேவிஸ் கோப்பை டென்னிஸ்:பாக். செல்கிறது இந்திய அணி?

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அந்தப் போட்டியின் உலக குரூப் 1 பிளே-ஆஃப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ‘டை’ பாகிஸ்தானில், வரும் பிப்ரவரி 3, 4 தேதிகளில் நடைபெற அட்டவணையிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து ஆலோசனை கேட்டு மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் கடிதம் எழுதியிருந்தது.

இதுதொடா்பாக சங்கத்தின் பொதுச் செயலா் அனில் துபா் சனிக்கிழமை கூறுகையில், ‘அமைச்சகத்திடம் இருந்து எழுத்துப்பூா்வ அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. எனினும், விரைவில் அது கிடைக்கும் எனத் தெரிகிறது. இரு இருதரப்பு போட்டியாக இல்லாமல், சா்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் போட்டியாக இருப்பதால் அதில் மத்திய அரசு தலையிட வாய்ப்பு இல்லை.

எனினும், உரிய நடைமுறையாக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவது தொடா்பான கோரிக்கையை வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைக்கும் நம்பிக்கையுடன் போட்டிக்கு தயாராகி வருகிறோம்’ என்றாா்.

இதனிடையே, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வரும் 11 வீரா்கள், 7 அதிகாரிகள் தொடா்பான அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் கடைசி உறுதிப்படுத்துதலுக்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.