`இன்னும் பழைய அரசாங்கத்தையே குறைச் சொல்லிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை - விஜய்யை சாடிய எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``சென்னையில் நேற்று நான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கொண்டு வருவது மீனவ மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துன்பம், துயரமாக பார்க்கிறேன் என்று பேசியிருந்தேன். அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, `நாங்கள் இப்போதுதான் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இவருடைய விளக்கம் எங்காவது ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளதா? `பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், `நாங்கள் இன்னும் அரசாணையே போடவில்லை. ஆய்வுதான் செய்து கொண்டிருக்கிறோம் என பொய்யைச் சொல்லி தமிழக மக்களை, குறிப்பாக மீனவ மக்களை ஏமாற்றுகிற ஒரு அரசாங்கம் நடந்துக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே பல பொய்ப் புரட்டுகளை சொல்லி, சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை சொல்லி ஆட்சிக்குவந்த தற்போதைய அரசு, ஏற்கனவே கொடுத்த அரசாணையையும் தற்போது இல்லை என சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது மீனவ சகோதரர்கள் பூர்வ குடிகளின் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டுமானால் தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் கட்டக்கூடாது. அவர்கள் அதை கைவிட வேண்டும் சென்னையில் எவ்வளவு இடம் இருக்கிறது. அங்கே போய் கட்டட்டும். அதேபோல, தமிழ்நாட்டில் இன்று ஒரே பயமாக உள்ளது. டெங்குவின் கொடூர தாக்குதலில் தமிழக மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 16,830 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 9-ல் இருந்து 10 பேர் டெங்குவால் இறந்திருக்கிறார்கள். டெங்குவை கட்டுப்படுத்தவும், மின்சாரப் பற்றாக்குறையை குறைக்கவும் இந்த அரசு செயல்பட்டு இருக்கலாம்.
`வெளிப்படையான, நியாயமான அரசாங்கத்தை தருவோம் எனச் சொன்னார்கள். ஆனால் 4 மாதங்களைக் கடந்த பின்னரும் இன்னும் பழைய அரசாங்கத்தையே குறைச் சொல்லிக் கொண்டிருப்பதில் நியாயமில்லை. எதற்கு இடைத்தேர்தல்... யாரால் இடைத்தேர்தல்? ஒரு கட்சியில் நின்று வெற்றிபெற்று உடனே ராஜினாமா செய்து, ஆளும் கட்சியில் சேர்ந்து அவர்களே போட்டியிடுகிறார்கள் என்றால் இது மக்களையும், அந்த வாக்காளர்களையும் ஏமாற்றுகின்ற செயலாகத்தான் உள்ளது. `குதிரை பேரம் நடந்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். சுகாதாரத் துறை அமைச்சர் தாராபுரம் தொகுதிக்குப் பொறுப்பாளராக உள்ளார். அரசு வேலையைப் பார்க்காமல் தேவையில்லாமல் உருவாக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் வரிப்பணத்தில் மக்கள்மீது சுமையை ஏற்றி இந்த இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சென்னையில் ஓட ஓட ஆளுங்கட்சியினரையே வெட்டுகிறார்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப் பெரிய அளவில் சீர்கெட்டுள்ளது. எதை எதையெல்லாம் மக்களிடத்தில் சொல்லி கட்டுப்படுத்துவோம் என வந்தார்களோ, அதில் எதையும் கவனித்தவாறு இல்லை. அனைவருமே இடைத்தேர்தலில் இன்றைக்கு வேலைச் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

வேலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு நல்ல செய்தி, நம்முடைய வேலூர் விமான நிலையம் தயாராக இருக்கிறது. தொடர்ந்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசி வருகிறேன். அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. `திறப்பு விழாவிற்கான தேதியை மட்டும் நிர்ணயிக்க வேண்டியது தான் பாக்கி என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்திற்கு `நவோதயா பள்ளிகள் அவசியம் தேவை. சி.பி.எஸ்.சி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள வசதிகள் நவோதயா பள்ளிகளிலும் உள்ளது. அப்படியானால் ஏன் அதை வேண்டாம் என்கிறார்கள். தி.மு.க-காரர்கள் எத்தனை பேர் சி.பி.எஸ்.சி பள்ளிகளை நடத்துகிறார்கள். நவோதயா பள்ளி வேண்டாம் என்பவர்கள் அந்த அம்சம் கொண்ட அவர்கள் பள்ளிகளை மூடுவார்களா? அனைத்தையும் வியாபார நோக்கத்திற்காக மட்டும் பார்க்கக் கூடாது. அதேபோல, வேலூரில் இடம் கொடுத்தால் கேந்திரிய வித்யாலயா பள்ளியைக் கொண்டு வருவது எனது பொறுப்பு" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

