யாரும் என்னை மிரட்ட முடியாது; பண்ணையார் அரசியல் எல்லாம்..!- கே.என் நேருவுக்கு துரை வைகோ பதில்
மதிமுக எம்.பி துரை வைகோ செப்.15 செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா?
எனது எம்.பி பதவி அப்படியே திமுக பிச்சை போட்டதாக வைத்துக்கொண்டாலும், கொளத்தூரில் திமுக தலைவருக்கே மக்கள் பிச்சை போடவில்லையே.. அதற்கு என்ன பதில்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து செப். 17 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிடம், துரை வைகோ பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், " நான் திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என்று எங்களிடம் சொன்னவர்தான் துரை வைகோ. எங்கள் அப்பா கோவக்காரர், என்னால் கட்சி நடத்த முடியாது என்றார். சின்னப் பிள்ளையாக இருந்துகொண்டு ரொம்ப அதிகமாக பேசுகிறார் துரை.
எங்களின் வளர்ச்சி நின்று போய் விட்டது என்கிறார். வெற்றி அடைந்த வேட்பாளர் அவர்களுடன் சென்றிருந்தால் வளர்ச்சி வந்திருக்குமா? எனத் தெரியவில்லை. கடுமையாக தான் பேசுகிறார். அது நியாயமில்லை. தளபதி ஸ்டாலினை பற்றி வயதில் சிறியவராக இருக்கும் துரை வைகோ பேசலாமா? மிசா காலத்தில் அவர் பிறந்திருக்கவே மாட்டார்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி துரை வைகோவிடம் கே.என். நேரு பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், " நான் மக்கள் பணி செய்துகொண்டு நல்ல அரசியலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால் என்னை கொச்சையாகப் பேசுவது தனி மனித தாக்குதல் நடத்துவது போன்ற விஷயங்களைச் செய்கிறார்கள். அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். அண்ணன் நேரு மறைமுகத் தாக்குதலை நடத்துவார்.
அவர்கள் கட்சியில் இருக்கும் எத்தனை எம்எல்ஏ-க்களை அவர் காலி செய்திருக்கிறார். யாரும் என்னை மிரட்ட முடியாது. இந்தப் பண்ணையார் அரசியல் இதெல்லாம் என்னிடம் நடக்காது; என்னை மதித்தால் மதிப்பேன்" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

