MDR: மளிகைக் கடைகளில் UPI Payment செய்தால்கூட கட்டணமா? கஸ்டமர் தலையில் விழுமா இது? | Explained FAQ
கையிலும், பர்ஸிலும் பணத்தை வைத்துக்கொண்டு, அதைப் பத்திரமாகப் பொத்திப் பொத்திக் கொண்டுபோய் வந்துகொண்டிருந்த காலமெல்லாம் இப்போது மலையேறிவிட்டது.
இப்போதெல்லாம் எங்கே போனாலும் குறைந்தபட்சத் தொகையைக் கையில் வைத்துக்கொண்டு, மற்ற அமவுன்ட்டையெல்லாம் டிஜிட்டல் பேமென்ட் ஆப்ஸை நம்பிச் சென்றுவிடுகிறோம்.
இப்போது தள்ளுவண்டிக் கடை, பெட்டிக் கடை தொடங்கி எல்லா இடங்களிலுமே டிஜிட்டல் பேமென்ட்டுக்கான கியூஆர் கோடுகள் வந்துவிட்டன.
நம் மக்கள் டிஜிட்டல் பேமென்ட்டை ஈசியாக ஏற்றுக்கொண்ட முக்கிய காரணங்களில் ஒன்று - அதற்குக் கட்டணம் இல்லாததும்தான்.
ஆனால், இப்போது மத்திய அரசு, Merchant Discount Rate (MDR)-ஐ அமலுக்குக் கொண்டுவந்துள்ளது. இதன் கீழ், சில டிஜிட்டல் பேமென்ட் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணங்கள் வசூலிக்கப்பட உள்ளன.
அந்தக் கட்டணங்கள் குறித்து FAQ முறையில் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். வாங்க...
ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பணம் அனுப்பினால் கட்டணமா?
இல்லவே இல்லை. ஒரு தனிநபர் இன்னொரு தனிநபருக்குப் பணம் அனுப்பும்போதோ, ஒரு தனிநபர் இன்னொரு தனிநபரிடம் பணம் பெறும்போதோ எந்தக் கட்டணமும் இல்லை.
அனுப்பும்... பெறும் தொகை எத்தனை ரூபாயாக இருந்தாலும் கட்டணம் எதுவும் இல்லை.
பிறகு யாருக்குக் கட்டணம்?
ஒரு தனிநபர் ஒரு பிசினஸ் கணக்கிற்கு அதாவது வியாபாரிகளுக்குப் பணம் அனுப்பும்போதுதான் கட்டணம் வசூலிக்கப்படும்.
இது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.4 சதவிகிதமாக கட்டணம் வசூலிக்கப்படும்.
மளிகைக் கடை, ரோட்டுக் கடைகளில் ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால், கட்டணம் வருமா?
மளிகைக் கடை, சிறு தொழில், ரோட்டுக் கடைக்காரர்களைப் பாதுகாக்க MDR-ல் முக்கிய நடைமுறை இருக்கிறது.
அதன்படி, ஒரு மாதத்திற்குக் கியூஆர் கோடு மூலம் பெறப்படும் யுபிஐ பேமென்ட் இவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால், இவர்களுடன் நடக்கும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் எதுவும் இல்லை.

ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை என்று ஏதோ சொல்கிறார்களே?
ஆம்... மேலே சொன்னவர்களைத் தாண்டி, வியாபாரிகளுக்கு ரூ.2,000 வரையிலான பேமென்ட் செய்தால், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படாது. ரூ.2,000-க்கு மேலான பேமென்ட்டுகளுக்குத்தான் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
வசூலிக்கப்படும் கட்டணம் மத்திய அரசுக்குச் செல்லுமா?
MDR அல்லது NPCI என்பது மத்திய அரசு வசூலிக்கும் வரியோ, கட்டணமோ இல்லை.
இந்தக் கட்டணம் UPI நெட்வொர்க்கில் உள்ள வங்கிகள், பேமென்ட் ஆப்ஸுக்குச் செல்லும். இது UPI நெட்வொர்க் இயக்கத்திற்கும், அது இன்னும் விரிவடைவதற்கும் பயன்படுத்தப்படும்.
கட்டணம்... கட்டணம் என்று சொல்கிறார்களே... அதை யார் செலுத்த வேண்டும்?
MDR கட்டணம் கஸ்டமர்கள் கட்ட வேண்டியதில்லை. இந்தப் பேமென்ட்டுகளைக் கடைக்காரர்களும், பிசினஸ் செய்பவர்களும்தான் கட்ட வேண்டும்.
இந்தப் பேமென்ட் கடைக்காரர்கள், பிசினஸ்தாரர்களிடமிருந்து கஸ்டமர்கள் தலையில் விழாமல் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்போது தனிநபர்களுக்கு எந்தக் கட்டணமுமே இல்லையா?
வங்கி மற்றும் NPCI நடைமுறைப்படி, ஒரு தனிநபர் ஒரு நாளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். இந்தப் பரிவர்த்தனைக்குள் எந்தக் கட்டணமும் இல்லை.

கிளம்பியுள்ள எதிர்ப்புகள்
மத்திய அரசு இந்த MDR குறித்துப் பேசத் தொடங்கியதிலிருந்தே, எதிர்ப்புகள் எழுந்துகொண்டேதான் இருக்கின்றன.
இந்தியப் பிரதமர் மோடி, ‘டிஜிட்டல் இந்தியா’ என்று பிரசாரம் செய்தே மக்களிடையே UPI பழக்கத்தைக் கொண்டுவந்தார்.
தற்போது MDR என்று அமலுக்கு வந்தால், மீண்டும் மக்கள் பணத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வியாபாரிகள் இந்தக் கட்டணத்தைக் கஸ்டமர்களிடம் வசூலிக்கத்தான் அதிகம் முயல்வார்கள். இதை நேரடியாகச் செய்ய முடியவில்லை என்றால் தாங்கள் விற்கும் பொருள் அல்லது சேவைகளின் விலையை ஏற்றுவார்கள்.
இது கஸ்டமர்களுக்குப் பணச்சுமையை ஏற்றும்.
இதையெல்லாம் தவிர்க்க, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும்... இதை எப்படி நடைமுறைப்படுத்தும் போன்ற தெளிவான விளக்கங்களும், நடைமுறைகளும் வேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


