24 காரட் தங்க பிளேட், 3.8 லட்சம் அமெரிக்க வைரங்கள் - பக்தர்களைக் கவரும் ஐதராபாத் விநாயகர்
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகத் தொடங்கியது. இதையடுத்து மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் தினமும் பூஜை செய்து வருகின்றனர்.
மும்பையில் மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் இந்த விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள பேகம் பஜாரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அங்குள்ள லிச்சி பேர்ல் செட் ஜூவல்ஸ் என்ற நகைக்கடையில்தான் இந்த விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கடையின் மூன்றாவது ஆண்டை முன்னிட்டு இந்த விநாயகர் சிலை பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சிலை 383,800 அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதோடு 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட பிளேட் மூலம் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லிச்சி பேர்ல் செட் ஜூவல்ஸ் அமைப்பாளர் அதர் அகர்வால் கூறுகையில், இந்த ஆண்டு விநாயர் விழாவுக்காக இந்தச் சிலை பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது. இந்த நகைக்கடை மூன்றாவது ஆண்டைக் கொண்டாடுகிறது. எனவே 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை நிறுவி வருகிறோம். இந்த ஆண்டு விசேஷமாக ஏதாவது செய்ய விரும்பினோம். எனவே விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத்துடன், இந்த அழகான சிலையை நாங்கள் நிறுவினோம். இந்தச் சிலை பித்தளையால் ஆனது. இதற்காக ஐந்து வெவ்வேறு உலோகங்களைப் பயன்படுத்தியுள்ளோம்.
சிலை முழுக்க முழுக்க 3,83,800 அமெரிக்க வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. இவைதாம் எங்கள் பேஷன் நகைகளில் பயன்படுத்தப்படும். அதனால் சிலைக்கு ஒரு நகை டச் கொடுக்க நினைத்தோம். எங்கள் பேஷன் நகைகளில் எந்த மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதோ, அதே மூலப்பொருட்களை சிலைக்குப் பயன்படுத்தியுள்ளோம் என்றார்.
மேலும், இந்தச் சிலையானது சிக்கலான முறையில் வடிவமைக்கப்பட்டு, ஒவ்வொரு கல்லும் கையால் பொருத்தப்பட்டதாகவும், எட்டு தொழிலாளர்கள் எட்டு மாதங்களாக இரவு பகலாக உழைத்ததாகவும் அவர் கூறினார். சிலை லால்பாக் கா ராஜா கணபதியைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


