நிகழ்ச்சி தொடர்பாக பேசியதை தவறாக சித்தரிக்க வேண்டாம்! - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

பிக்பாஸ்

இந்த நிலையில், சர்ச்சைக்குள்ளான விஜய் சேதுபதியின் கருத்து குறித்து விஜய் டிவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

பிக்பாஸில் கடந்த சனிக்கிழமை வெளியான எபிசோடில், தலைமைத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளிவிட்டு பிரச்னை வரும்போது எதிர்க்கட்சி மீது பழியை போட்டு தெறித்து ஓடுவது தலைமைப் பண்பல்ல! என நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களை மையப்படுத்திப் பேசியிருந்தார். இதை முதல்வர் விஜய்யை நோக்கிய விமர்சனமாக எடுத்துக் கொண்டு தவெகவினர் சமூகவலைதளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

இந்நிலையில் இதுதொடர்பாக விஜய் டிவி அளித்திருக்கும் விளக்கத்தில், Bigg Boss தமிழ் சீசன் 10 ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள், கருத்துகள் அனைத்தும் நிகழ்ச்சியை மையப்படுத்திய சூழலுக்கு உட்பட்டவையே. அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு அல்லது கொள்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது’ என விஜய் டிவி தெரிவித்துள்ளது.

மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் எந்தவொரு கருத்தும் நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள நபர், அமைப்பு அல்லது சூழ்நிலையை ஆதரிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ அல்லது பிரதிபலிப்பதாகவோ கருதக்கூடாது என்றும் விளக்கம் அளித்திருக்கிறது.

விஜய் சேதுபதியின் கருத்துக்கு தவெக தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், விஜய் டிவியின் இந்த விளக்கம் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.