Doctor Vikatan: நள்ளிரவில் சிறுநீர், கலையும் தூக்கம்... விடியும்வரை விழிப்பு... தீர்வு உண்டா?

Doctor Vikatan: என்னுடைய வயது 56. நள்ளிரவில் சிறுநீர் கழிக்கச் செல்வது வழக்கமாகி விட்ட நிலையில் மீண்டும் படுக்கைக்கு வந்து படுத்தால் தூங்க முடிவதில்லை. விடியற்காலை வரை விழித்திருக்கிறேன். இதற்குத் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்

சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல தூக்கம் என்பதும் ஒரு பழக்கம்தான். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, நடு இரவில் விழிப்பு வந்துவிட்டால் உடனே தூக்கம் வராது. ஆனால், நாம் தூங்க வேண்டும் என்று முயற்சி செய்ய வேண்டும்.

எனக்குத் தூக்கமே வரவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தால் தூக்கம் வராது. அதனால், எழுந்து சிறுநீர் கழித்துவிட்டு வந்தாலோ அல்லது கொஞ்ச நேரம் விழித்திருந்தாலோ, திரும்பவும் கண்களை மூடிப் படுத்து, நான் தூங்கப் போகிறேன்  என்று நினைப்பதுதான் தூங்க வைக்குமே தவிர, உடனடியாக இதற்கெல்லாம் மருந்து தேவையில்லை.

இரண்டாவதாக, பகலில் நாம் எந்த அளவுக்கு களைப்பாகிறோமோ, அந்த அளவுக்கு இரவில் நல்ல தூக்கம் வரும். அதனால் வயதானவர்கள் பகல் நேரத் தூக்கத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இரவில் தூங்குவதை மட்டும் பழக்கமாக வைத்திருந்தால்தான் அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். அறையை இருட்டாக்கித் தூங்குவது நல்லது. செல்போன் பார்க்கும் பழக்கம் இருந்தால், தூங்கப் போவதற்கு முன்பான நேரத்தில் செல்போன் பார்க்கக் கூடாது. அமைதியாக கண்களை மூடி  சிறிது நேரம் படுத்திருப்பது நல்லது.

பகலில் நாம் எந்த அளவுக்கு களைப்பாகிறோமோ, அந்த அளவுக்கு இரவில் நல்ல தூக்கம் வரும். அதனால் வயதானவர்கள் பகல் நேரத் தூக்கத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு ஒன்றிலிருந்து நூறு வரை அல்லது நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாக (Down counting) எண்ணிப் பார்த்தால் தூக்கம் வரலாம். தானாக ஆஃப் (Off) ஆகும் வசதி கொண்ட மெல்லிய இசையையோ, பாட்டையோ கேட்கும் பழக்கம் இருந்தால் அதைக் கேட்கலாம். அதுவும் நல்ல தூக்கத்துக்கு அழைத்துச் செல்லும்.

பொதுவாக, நான் பாதி தூக்கத்தில் விழித்துக்கொண்டு சிறுநீர் கழித்துவிட்டு வந்து திரும்பப் படுத்தாலும் மீண்டும் தூங்கிவிடுவேன்  என்று நம் மனதைப் பழக்குவதுதான் நல்லது. இதற்கு மருந்துகளோ, மாத்திரைகளோ தீர்வாக முடியாது.

டாக்டர் அருணாசலம்:

32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொது மருத்துவரான டாக்டர் அருணாசலம், சென்னை கே.கே.நகரில் அருண் விஜயா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 1994-ல் யு.எஸ்.எஸ்.ஆரின் மின்ஸ்க் அரசு மருத்துவக் கல்லூரியில் MD பட்டம் பெற்ற இவர், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) உறுப்பினராக இருக்கிறார். பொது மருத்துவம், வளரிளம் பருவத்தினருக்கான மருத்துவம் மற்றும் தடுப்பு மருத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.