India Valves 2026: மருத்துவ வசதி என்பது மனித உரிமை - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
"ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒரு நோயாளி இருக்கிறார்..." என்று பேசியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
சென்னையில் நடந்த இதய வால்வு மற்றும் இதய அமைப்பு சார்ந்த சிகிச்சையை மேம்படுத்துவதற்கான தேசிய அளவிலான மருத்துவக் கல்வி மாநாட்டில் (India Valves 2026) பங்கேற்று இந்திய இதய வால்வு பதிவேட்டை (India Valve Registry) தொடங்கி வைத்தார்.
இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் முன்னணி இதயநோய் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்வில் பேசிய குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், "மருத்துவ நிபுணத்துவம், அறிவியல் ஆய்வு, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சி ஆகியவை ஒரே தளத்தில் ஒன்றிணைவது மனிதகுல நலனுக்கான முக்கியமான முன்னேற்றமாகும்.

ஒவ்வொரு மருத்துவச் செயல்முறைக்கும், மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னாலும், ஆரோக்கியமாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒரு நோயாளி இருக்கிறார். மருத்துவ வசதி என்பது மனித உரிமை, மருத்துவ அறிவியலில் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றமும், அதன் பயன்களும் அனைவரையும் சென்றடையும் வகையில் இருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
இதய வால்வு, இதய அமைப்பு சார்ந்த நோய்களை அதிகரித்து வருவது சவாலாக உள்ள போதிலும், மருத்துவ அறிவியலின் முன்னேற்றங்கள் இந்நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் இந்திய இதய வால்வு பதிவேடு தொடங்கப்பட்டிருப்பது முக்கியமான முன்னேற்றமாகும். இதய வால்வு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, காலப்போக்கில் ஏற்படும் சிகிச்சை விளைவுகள் குறித்த தகவல்களை முறையாகப் பதிவு செய்வதன் மூலம் ஒருங்கிணைந்த மருத்துவ அறிவாக மாற்ற முடியும்
பல்வேறு நாடுகள் மேம்பட்ட இதய வால்வு சிகிச்சைகள் மற்றும் பிற இதய இரத்த நாள சிகிச்சைகளுக்கான தேசிய பதிவேடுகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற கூட்டு முயற்சியை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.

இன்றைய சூழலில் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், தரவுகள் இல்லாமல் நாம் அதிகமாக சாதிக்க முடியாது. இந்தியாவுக்கே உரிய மருத்துவ தரவுகளை, ஆராய்ச்சி முடிவுகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் வளர வேண்டும். உலகளாவிய மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் மிகவும் மதிப்புமிக்கவை என்றாலும், இந்தியா தனது சொந்த நோயாளிகள் மற்றும் மருத்துவ அனுபவங்களின் அடிப்படையில் மருத்துவ தரவுகளை உருவாக்க வேண்டும்.
இதுபோன்ற பதிவேடுகள், சிகிச்சை விளைவுகளை நன்கு புரிந்துகொள்ளவும், சவால்கள் மற்றும் இடைவெளிகளைக் கண்டறியவும், மருத்துவ அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும், நோயாளிகளுக்கான சிகிச்சையை மேம்படுத்தவும் மருத்துவ சமூகத்திற்கு உதவும்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சுகாதாரத் துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளதற்கு சுகாதாரப் பாதுகாப்பு விரிவாக்கமும், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களும்தான் காரணம். தற்போது 44 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மருத்துவ நிபுணத்துவம் மற்றும் புத்தாக்கத்திற்கான முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றின்போது இந்தியா தனது மக்களுக்காக தடுப்பூசிகளை உருவாக்கியதுடன், சுமார் 100 நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கியது. இது இந்தியாவின் வளர்ந்து வரும் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
நமது மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்கள் உலகம் முழுவதும் மதிப்பைப் பெற்றுள்ளனர். மேம்பட்ட மருத்துவச் சிகிச்சையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
தேசிய இலக்கின் மூலம் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா, ஆரோக்கியமான இந்தியாவாகவும் திகழ வேண்டும்.
இதுபோன்ற சூழலில், இந்திய இதய வால்வு பதிவேடு தரவுகள் அடிப்படையிலான மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்களிப்பை வழங்க முடியும். இந்தப் பதிவேடு இளம் இதயநோய் மருத்துவர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இது நோயாளிகளின் தனியுரிமை தகவல்களைக் காப்பதில் கவனம் செலுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், அப்பல்லோ மருத்துவமனைகளின் மூத்த இதயநோய் மருத்துவரும், மாநாட்டின் பாடநெறி இயக்குநருமான டாக்டர் ஜி. செங்கோட்டுவேலு உட்பட முன்னணி இதயநோய் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

