டாஸ்மாக் பிரச்னை 200 படிகள் கொண்டது; நான் 70 படிகள் ஏறிவிட்டேன் - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கோவை பேரூர் அருகே த.வெ.க மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது, “புனிதமான தமிழ் மண்ணில் பிறக்கும் குழந்தைகள், தளபதி ஆட்சியில் வரம் வாங்கிக்கொண்டு பிறக்கும் குழந்தைகள். அவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

டாஸ்மாக் ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்கள் மீண்டும் கடைகளைத் திறக்க ஆரம்பித்துவிட்டனர். பணிக்கு வராத ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது.

தவறு யார் செய்தாலும், தவறுதான். அரசு தவறு செய்தாலும், அமைச்சர் தவறு செய்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். டாஸ்மாக் பிரச்னைக்கு தி.மு.க, அ.தி.மு.க.தான் காரணம். இன்றைக்கு டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிலை ஏற்பட்டதற்கு தி.மு.க-வும், அ.தி.மு.க-வும்தான் காரணம்.

அமைச்சர் விக்னேஷ்

கடந்த காலங்களில் இந்தப் பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இது இவ்வளவு தூரம் வந்திருக்காது. இது ஒரு உதாரணம்தான். இதுபோன்று பல்வேறு துறைகளிலும் பிரச்னைகள் உள்ளன. அவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் பிரச்னை என்பது 200 படிகள் கொண்டது. அதில் நான் தற்போது 70 படிகள் வரை ஏறிவிட்டேன். மீதமுள்ள படிகளையும் ஏறி, டாஸ்மாக் தொடர்பான பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.