அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் படுகொலை; வேலை இழந்த விரக்தியில் தோழி செய்த கொடூரம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், மண்ணுத்தி முடிக்கோட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் - சுஷ்மா தம்பதியின் மகள் அஞ்சனா ஹரி (35), திருவனந்தபுரம் கேசவதாசபுரம் காக்கநாடு லேனைச் சேர்ந்த ஜிஜி மேத்யூ மற்றும் மறைந்த பெஸ்ஸி ஜி. மேத்யூ தம்பதியின் மகள் ஆன் மேரி மேத்யூ (40), கோட்டயம் மூன்னிலவு பகுதியைச் சேர்ந்த அனிலா (32) ஆகியோர் அமெரிக்காவின் கலிபோர்னியா மில்பிடாஸ் நகரில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். அஞ்சனா ஹரிக்கு விஜீஸ் என்ற கணவரும், வாமிகா (6) என்ற மகளும் உண்டு. ஆன் மேரி மேத்யூ-க்கு ஜேக்கப் என்ற கணவரும் ஆன்ட்ரீசா (12), அலீசா (5) ஆகிய இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். அஞ்சனாவும் ஆன் மேரியும் அமெரிக்காவில் பள்ளி ஆசிரியைகளாகப் பணியாற்றி வந்தனர். அனிலா அங்குள்ள ஒரு முன்னணி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அமெரிக்காவில் வைத்து அறிமுகமான இவர்கள் மூவரும் மிக நெருங்கிய தோழிகளாக மாறினர். இவர்களது குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் மிகுந்த பாசத்துடன் பழகி வந்தனர். அஞ்சனாவின் பெற்றோரிடம் அனிலா அடிக்கடி வீடியோ அழைப்பில் பேசி அன்பைப் பகிர்வது வழக்கம். இந்த நிலையில், அமெரிக்க நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஆன் மேரி மேத்யூவையும், அஞ்சனாவையும் குத்திக் கொலைசெய்துள்ளார் அவர்களது தோழி அனிலா.

கொலை செய்யப்பட்ட அஞ்சனா ஹரி, ஆன் மேரி மேத்யூ மற்றும் கொலை செய்த அனிலா

அனிலா முதலில் ஆன் மேரியின் வீட்டிற்குச் சென்று அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் அஞ்சனாவை அவரது வீட்டிலிருந்து கீழே கார் நிறுத்துமிடத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த அஞ்சனாவை தனது எஸ்.யு.வி காரால் வேகமாக மோதித் தள்ளிவிட்டு அனிலா தப்பி ஓடியுள்ளார். காரை ஓட்டியது ஒரு பெண் என்பதை அங்கிருந்தவர்கள் பார்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது அஞ்சனா உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மென்பொருள் பொறியாளரான அஞ்சனாவின் கணவர் விஜீஷ் வீட்டிலிருந்து பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், தகவல் அறிந்து தனது மனைவி கார் மோதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்த அவர் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். அஞ்சனா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த ஆன் மேரி மேத்யூவின் கணவர் ஜேக்கப் தனது வீட்டிற்குச் சென்று பார்த்தார். அங்கு ஆன் மேரி மேத்யூ ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து நிலைகுலைந்து போனார் ஜேக்கப்.

கொலை செய்யப்பட்ட அஞ்சனா ஹரி, ஆன் மேரி மேத்யூ

இதையடுத்து அனிலாவைக் கைதுசெய்த போலீஸார், அவரது காரையும் பறிமுதல் செய்தனர். கொலை நடப்பதற்கு இரண்டு நாள்கள் முன்பு மூவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர். சமூக வலைதளங்களில் அவர்கள் பகிர்ந்த புகைப்படங்களில் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே பயங்கரமான இரட்டைக் கொலையை அரங்கேற்றியுள்ளார் அனிலா. ​தனது வேலை பறிபோன நிலையில், தனது நெருங்கிய தோழிகளான அஞ்சனா மற்றும் ஆன் மேரியின் ஆசிரியர் பணிகள் நிரந்தரமாக இருந்ததும் அனிலாவுக்குக் கடும் மன உளைச்சலையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்த விரக்தியில் இருந்த அனிலா, பொறாமை மற்றும் மன அழுத்தத்தின் உச்சக்கட்டமாகவே தனது தோழிகள் இருவரையும் கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். தற்போது தாயை இழந்த அஞ்சனாவின் 6 வயது மகள் வாமிகா, நண்பர்களின் பாதுகாப்பில் உள்ளார். பிரேத பரிசோதனை மற்றும் சட்ட நடைமுறைகளை முடித்து இருவரின் உடல்களையும் கேரளத்துக்கு கொண்டு வர இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டைக் கொலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.