ஸ்மார்ட்போன், இன்டர்நெட் இல்லையா? இனி கவலை வேண்டாம் - பட்டன் போனிலேயே UPI மூலம் பணம் அனுப்பலாம்!

ஸ்மார்ட்போன் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது என்ற நிலையை மாற்றகூடிய வகையில் இன்டர்நெட் வசதி இல்லாமலேயே பணம் அனுப்பவும், கடைகளில் பணம் செலுத்தவும் உதவும் ‘PhonePe UPI 123Pay’ என்ற புதிய சேவையை PhonePe நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் சேவை முக்கியமாக சாதாரண பட்டன் போன் பயன்படுத்துபவர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பட்டன் போன் பயனர்கள் இருப்பதாக PhonePe தெரிவித்துள்ளது. அவர்களையும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் கொண்டு வருவதே இந்த முயற்சியின் நோக்கம்.

இந்தச் சேவையின் முக்கிய சிறப்பு, இன்டர்நெட் தேவையில்லை என்பதுதான். SMS அடிப்படையிலான முறையில் இது செயல்படுவதால், குறைந்த 2G இணைப்பு இருக்கும் பகுதிகளிலும் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

UPI வசதி

மொபைல் எண் அல்லது UPI ID மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பலாம். UPI ID மூலம் கடைகளிலும் பணம் செலுத்தலாம். கேமரா வசதி உள்ள பட்டன் போன்களில் QR கோடை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்த முடியும். வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் ஏற்கெனவே செய்த பணப்பரிவர்த்தனைகளையும் பார்க்கலாம்.

தற்போது Nokia, HMD, Lava International மற்றும் Itel Mobile நிறுவனங்களின் சில போன்களில் PhonePe UPI 123Pay முன்கூட்டியே நிறுவப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் பல போன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக PhonePe தெரிவித்துள்ளது.

எப்படி பதிவு செய்வது?

பட்டன் போனில் இருக்கும் PhonePe செயலியைத் திறந்து, விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் வங்கியைத் தேர்வு செய்து, டெபிட் கார்டின் கடைசி 6 எண்கள் மற்றும் காலாவதி தேதியை உள்ளிட வேண்டும். தொடர்ந்து UPI PIN அமைத்ததும், UPI வசதியைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

பயனர்களுக்கு உதவ AI அடிப்படையிலான குரல் உதவி சேவையையும் PhonePe அறிமுகப்படுத்தியுள்ளது. ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் இந்த உதவி கிடைக்கும். சேவையைச் செயல்படுத்துவது முதல் UPI தொடர்பான அடிப்படை சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பது வரை இந்தக் குரல் உதவி வழிகாட்டும்.

அடுத்தடுத்த அப்டேட்களில் பில் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் மற்றும் ஆதார் மூலம் UPI-யில் பதிவு செய்தல் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

phonepe

PhonePe நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சமீர் நிகம், ஸ்மார்ட்போன்களைத் தாண்டி பட்டன் போன் பயன்படுத்துபவர்களுக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பயனைக் கொண்டு செல்வதே இந்த முயற்சியின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் சிறுநகர்ப்புறங்களில் இன்டர்நெட் வசதி சீராக இல்லாதவர்களுக்கு இந்தச் சேவை உதவியாக இருக்கும் என்றார்.

ஸ்மார்ட்போன், அதிவேக இன்டர்நெட் இல்லாமலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைச் சாத்தியமாக்குவது, தொழில்நுட்பம் அனைவரையும் சென்றடையும் வகையில் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

பட்டன் போன்களையும் டிஜிட்டல் உலகத்துடன் இணைக்கும் இந்த முயற்சி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.