ஏழரைச்சனி கஷ்டம் நீங்கிட கும்பம், மீனம், மேஷம் 3 ராசியினர் அவசியம் அறியவேண்டிய ஜோதிட பரிந்துரைகள்!
நவகிரகங்களில் சாயா புத்திரனான சனி பகவான் தர்மத்தை நிலைநாட்டும் மூர்த்தியாகத் திகழ்கிறார். முன்வினைகளுக்கு ஏற்ற பலாபலன்கள் அவரால் செயல்படுத்தப்படுகின்றன. சனிபகவான் ராசிக்கு 12, 1, 2 வரும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம்.
ஆயுளில் 3 முறை வரும் ஏழரைச் சனி சஞ்சாரம்
பெரும்பாலும் ஒருவரின் ஆயுளில் மூன்று முறை ஏழரைச் சனி காலத்தைச் சந்திப்பார்கள். இது தொடர்பாக... இளமையில் சந்திப்பது மங்கு சனி; மத்திம வயதில் சந்திப்பது பொங்கு சனி; கடைசிக் காலத்தில் சந்திப்பது போக்குச் சனி எனும் நம்பிக்கை உண்டு.
குறிப்பாக மங்கு சனி, போக்குச் சனி குறித்து அதீத பயம் கொள் ளும் அன்பர்களும் உண்டு. ஆனால், சனி பகவான் குறித்து வீண் பயமோ, கலக்கமோ தேவையில்லை. சனி பகவான் விண்வெளியில் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர், இவர். ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார்.
முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது.
முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதைப் போக்கு சனி.
சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில், சகல விஷயங் களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனத்தில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கி விடும். ஆகவே, சனியின் பாதிப்பு மங்கியது என்பர்.
இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர்.
முதுமையில், சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக்கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும். ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக் காட்டி, போக்கு சனி என்றனர்.

இனி, ஏழரைச் சனி காலத்தில் கவனத்தில் வைக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.
1. புதிய முயற்சிகளில் தகுந்த திட்டமிடலும், தேவையான ஆலோசனையும் அவசியம் ஆகும்.
2. வீண் ஆடம்பரம், தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். தகுதிக்கு மீறிய விஷயங்களில் ஈடுபடுவது கூடாது.
3. மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
4. `நான் இதைச் செய்து தருகிறேன்; என்னிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்பது போன்ற வாக்குறுதிகள் வேண்டாம்.
5. அலட்சியப் போக்கையும் வறட்டு கெளரவத்தையும் தவிர்க்க வேண்டும்.
6. ஏழரைச் சனி காலத்தில் சொத்து வாங்குவது, வாகனம் வாங்குவது எனில் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, அதற்கேற்ப செயல்படலாம். ஜாதகப்படியும் கிரக நிலைகள் சாதகம் இல்லை எனில், பிள்ளைகள், வாழ்க்கைத் துணைவர் என மற்றவர்கள் பெயரில் வாங்கலாம்.
7. வியாபாரத்தை விரிவுபடுத்துவது, புதுத் தொழில் தொடங்குவது, வேறு வேலைக்கு முயற்சி செய்வது போன்ற காரியங்களிலும் மேற்சொன்னபடியே செயல்படலாம்.
8. நேர்மை, நீதி, வாக்கு தூய்மையை விரும்பக் கூடியவர் சனி பகவான். ஆகவே ஏழரைச் சனி நடக்கும் காலத்தில், சோதனை களைத் தாங்கி நேர்மையாக நடந்துகொண்டால் எந்தத் தீங்கும் ஏற்படாது.
9. ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் தாராளமாக வீடு- மனை வாங்கலாம். குறிப்பாக இரண்டாவது சுற்றுச் சனியை ‘பொங்கு சனி’ என்பார்கள். ஜாதகரது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் இவரது வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் இந்த பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வீடு- மனை வாங்கலாம்.
என்ன... சில நேரங்களில் மட்டும் நம் கண்களை மறைப்பார் சனிபகவான். அதனால் பிளாட் அப்ரூவல், வில்லங்க சர்ட்டிஃபிகேட் போன்ற விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏழரைச்சனி நடைபெறும் ஒருவர் போன ஜென்மத்தில் யாரையாவது ஏமாற்றி இருந்தால், இப்போது வீடு அல்லது மனை வாங்கும்போது அவர் ஏமாற வாய்ப்புகள் உண்டு. அதனால் முன் பணம் கொடுக்கும்போதும், பத்திரப்பதிவு செய்யும்போதும் வாரிசு தாரர்கள் எல்லாரும் கையெழுத்துப் போட்டுவிட்டார்களா என்பதை உன்னிப்பாகப் பார்த்துக் கொள்வது அவசியம்.

சில பரிகாரங்கள்... வழிபாடுகள்...
1. சனிக்கிழமை விரதம் இருந்து, எள் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து, சனிபகவானுக்கு உகந்த எள் எண்ணெய் விளக்கிட்டு, எள் சாதம் படைத்து, சனி கவசம் ஓதி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.
2. வெள்ளிக்கிழமை இரவு, எள் தானியத்தை கரும்பட்டுத் துணி அல்லது கருமை நிற காகிதத்தில் வைத்து மடித்து தலையணைக் குக் கீழ் வைத்து படுத்துறங்கவும். மறுநாள் காலையில் எள் எண்ணெய் தேய்த்துக் குளித்து, முதல்நாள் மடித்து வைத்த எள்ளை வடித்த சாதத்தோடு கலந்து நைவேத்தியம் செய்து காக்கைக்கு வழங்க நன்மை ஏற்படும்.
3. இயன்றபோது குச்சனூர், திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு முதலான தலங்களுக்கும் சென்று சனிபகவானை வழிபட்டு வரலாம்.
4. வெள்ளிக்கிழமைதோறும் அதிகாலை நீராடி அருகம்புல் மாலை சாற்றி, அரசமர பிள்ளையாரை சுற்றி வந்து முறையாக வழிபட் டால் சீரும் சிறப்பும் நாடி வரும்.
5. இயன்றபோதெல்லாம் அனுமனுக்கு வடைமாலை சாத்தி, துளசி மாலை அணிவித்து, வெண்ணெய் அர்ப்பணித்து வழிபட்டு வந்தால், பாதிப்புகள் நீங்கும்.
6. நளபுராணம் படிப்பதாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராம நாமத்தை உச்சரிப்பதாலும் பாதிப்புகள் நீங்கி பயன் அடையலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


