ஒரே திரைப்படத்தை அமெரிக்கா மீண்டும் மீண்டும் ஓட்டுகிறது.! - ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்
கடந்த 19-ஆம் தேதி ஈரானுக்கு எதிராகப் பொருளாதார D-Day-ஐ அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அமெரிக்க நேரப்படி இன்று (ஆகஸ்ட் 24), ஈரான் மீதான தடைகளை விளக்கமாக அறிவிக்க உள்ளார் அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்.
அமெரிக்காவின் இந்தத் தடை குறித்து நேற்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் கேட்கப்பட்டுள்ளது.
இந்தக் கேள்விக்கு அவர், “பல்வேறு பெயர்களில் முன்வைக்கப்படும் இந்த அதிமுக்கியத் தடைகள் அனைத்துமே பழைய கதைதான்.
அதே திரைப்படம்
அமெரிக்கக் கொள்கைகளில் நாம் வழக்கமாகப் பார்க்கும் அதே அடாவடித்தனம்தான் இதுவும்.
சொல்லப்போனால், திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும் ஒரே திரைப்படத்தைப் போலத்தான் இதுவும் இருக்கிறது.
இந்தத் திரைப்படம் மனப்பாடமாக எங்களுக்குத் தெரியும். அதை எப்படி எதிர்கொள்வது, எப்படி முறியடிப்பது என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
ராணுவ நடவடிக்கை எடுப்போம், ‘அடிப்போம், அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’ என்று மிரட்டியவர்கள், இப்போது மீண்டும் பழைய திட்டங்களுக்கே திரும்புவது, அவர்கள் எந்த அளவிற்கு விரக்தியில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
ஈரான் அப்போதுதான் மரியாதை தரும்!
ஈரான் என்ற மாபெரும் தேசத்திற்கு முன்னால், அவர்களுக்கு வேறு வழியே தெரியவில்லை.
அதனால்தான் ஒரே திட்டங்களை மீண்டும் மீண்டும் மேடைக்குக் கொண்டு வருகிறார்கள்.
ஈரானிய மக்களிடம் மரியாதையுடனும், நீதி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையிலான தீர்வுடனும் மட்டுமே பேச முடியும். வேறு வழியே இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் இந்தத் தவறான வழிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஏற்கனவே தெரிந்த சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும். கண்ணியமான மொழியில் பேசினால், ஈரான் தேசம் மரியாதையோடு பதிலளிக்கும்" என்று பதிலளித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
