கர்நாடக வனத்துறை தூப்பாக்கிச் சூடு: காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! - மு.க. ஸ்டாலின்
கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது.
நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கர்நாடக வனத்துறையினர் ரோந்து பணியின்போது, மறைந்திருந்த 4 தமிழர்கள் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில், மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மகிமை தாஸ் (48) மைசூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், "கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.
மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

