அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதில் அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கல்லூரியில் கஞ்சா புழக்கம் குறித்து தகவல் அளித்ததாலேயே அமுதன் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர். பெற்றோரின் குற்றச்சாட்டிற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தது.

அமுதன்

இந்த நிலையில், அமைச்சர்கள் சம்பத் குமார், வன்னி அரசு ஆகியோர் கள்ளக்குறிச்சியில் உள்ள அமுதன் இல்லத்துக்குச் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், ``மாணவர் அமுதன் குடும்பத்திற்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ. 6 லட்சம் நிதி உதவிக்கான ஆணையை வழங்கியுள்ளோம். மேலும், அமுதனின் குடும்பத்திற்கு வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரது சகோதரர் பி.பார்ம் படித்துவரும் நிலையில், அவருக்கு அரசு வேலைக்கான உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர் அமுதன் போதைப்பொருள் விற்பனை குறித்த பட்டியலை வெளியிட்டதால் தான் இந்த கொலை நடந்ததாக அவரது பெற்றோர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். அதேநேரம், சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இது ஒரு போஸ்டிங் தொடர்பான மோதல் என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் காவல்துறையினர் மிக நேர்த்தியாகவும் நியாயமான முறையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கடுமையான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

காவல்துறையினர் பெற்றோரின் புகாரைப் பெற மறுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. தற்போதைய ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள்களை ஒழிப்பதில் முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு செயலாற்றி வருகிறார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகிய இரண்டுக்கும் அரசு முதன்மை முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். வழக்கு விசாரணை சரியாக நடைபெற்று வருவதால், தேவைப்படும் பட்சத்தில் சிபிசிஐடி விசாரணை குறித்துப் பேசலாம்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.