Eye Scan: வடகிழக்கு மக்களின் சவால்; நகைச்சுவையாக நாகாலாந்து அமைச்சர் சுட்டிக்காட்டிய முக்கிய பிரச்னை

வடகிழக்கு இந்திய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தனது நகைச்சுவையான பதிவுகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நாகாலாந்து சுற்றுலா மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா அலங் புகழ்பெற்றவர். அந்த வகையில், வடகிழக்கு மக்கள் பயோமெட்ரிக் முறைகளில் சந்திக்கும் நடைமுறைச் சிக்கலை விவரிக்கும் வீடியோ ஒன்றை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "போராட்டம் உண்மையானது" (Struggle is real) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நாகாலாந்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு KYC சரிபார்ப்புக்காக ஐரிஸ் (கண் விழித் திரை) ஸ்கேன் செய்ய முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பலமுறை முயன்றும் ஸ்கேனர் அதை ஏற்றுக்கொள்ளாததால், அருகில் இருப்பவர்கள் அந்த நபரின் கண்களைப் பிடித்து அகலத் திறக்க முயல்கின்றனர். இந்தத் தொடர் தோல்விகள் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பை வரவழைத்த போதிலும், இதன் பின்னணியில் உள்ள முக்கியப் பிரச்சினை குறித்து விவாதம் உருவாகியுள்ளது.

நகைச்சுவை உணர்வோடு இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தாலும், வங்கிச் சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் அமைப்புகள் அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. ஒரே மாதிரியான தரநிலைகளைக் கொண்டு உருவாக்கப்படும் இத்தகைய தொழில்நுட்பங்கள், பல்வேறு பகுதி மக்களின் இயற்கையான உடலமைப்பு மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளத் தவறும்போது இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
அமைச்சரின் இந்தத் தகவலைத் தொடர்ந்து, பல்வேறு சமூக வலைதளப் பயனர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

தெம்ஜென் இம்னா அலங்

இயற்கை அளித்துள்ள உடலமைப்புப் பண்புகளுக்காக எந்தவொரு குடிமகனும் சேவை பெற முடியாமல் பாதிக்கப்படக்கூடாது என்றும், பயோமெட்ரிக் தோல்வி அடையும் பட்சத்தில் மாற்றுச் சரிபார்ப்பு முறைகளை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்றும் பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆசிய நாடுகளின் உடலமைப்புக்கு ஏற்ற பயோமெட்ரிக் தொழில்நுட்பங்களை இந்தியா ஆராய வேண்டும் என்றும் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 2022-ம் ஆண்டிலும், வடகிழக்கு மக்களின் சிறிய கண்கள் குறித்துப் பரப்பப்படும் தவறான கருத்துகளுக்கு அமைச்சர் இம்னா அலங் நகைச்சுவையாகப் பதிலளித்திருந்தார். சிறிய கண்கள் இருப்பதால் தூசி குறைவாகவே விழும் என்றும், நீளமான பொதுநிகழ்ச்சிகளில் யாருக்கும் தெரியாமல் எளிதாகத் தூங்க முடியும் என்றும் அவர் ஜாலியாகப் பேசிய வீடியோ வைரலானது.

தற்போது இந்த ஐரிஸ் ஸ்கேன் வீடியோ மூலமும், தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்ற முக்கியமான கருத்தை அவர் மீண்டும் பாசிட்டிவான முறையில் மக்கள் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.