சொத்து வரி மறு மதிப்பீடு தற்காலிகமாக நிறுத்தம் – சென்னை மாநகராட்சி முடிவு!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான சொத்து உரிமையாளர்களுக்கு அண்மையில் மறுமதிப்பீடு செய்யப்பட்ட சொத்து வரி தொடர்பான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து, ஏற்கெனவே செலுத்தி வந்த சொத்து வரியைவிட அதிகமாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.
இதனிடையே, மாநகராட்சி தரப்பில் ஆரம்பத்தில் சொத்து வரி பொதுவாக உயர்த்தப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. சொத்து வாங்கும்போது அல்லது பதிவு செய்யும்போது இருந்த நிலம் மற்றும் கட்டடத்தின் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு வரி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் கட்டடத்தின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டிருந்தால் அதற்கேற்ப வரி மறுமதிப்பீடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மறுமதிப்பீட்டு நடவடிக்கை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகள் மற்றும் புகார்களைத் தொடர்ந்து, சொத்து வரி மறு மதிப்பீட்டை தற்காலிகமாக நிறுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன்பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

