Tata Sons-ன் அடுத்த தலைவர் இவரா? - அடிபடும் பேச்சுகள்; தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாகிறது. மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிப்போட போவதில்லை என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துவிட்டார்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
நேர்காணலோ, தேர்வுகளோ வைத்து தேர்வுசெய்யப்படுவதற்கான பதவி அல்ல இது. டாடா குழுமத்தின் சட்டத்தின் படி, அந்தக் குழுமத்தின் ஒரு நிறுவனத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
தேர்வுக்குழு
டாடா குழுமத்தின் இந்தச் சட்டத்திற்கு, கட்டுப்பாட்டு விதிகள் (Articles of Association) என்று பெயர்.
டாடா குழுமத்தின் Article 118 விதியின்படி, டாடா அறக்கட்டளைகள் கூட்டாக 40 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட சாதாரணப் பங்குகளை வைத்திருக்கும் வரை, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 5 பேர் கொண்ட தேர்வுக்குழுவை டாடா சன்ஸ் அமைக்க வேண்டும்.
தற்போது டாடா அறக்கட்டளைகள் வசம் சுமார் 66% பங்குகள் உள்ளன. இதனால், ஐந்து பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்தக் குழுவில் மூன்று பேர் சர் தொராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகிய இரு அமைப்புகளால் கூட்டாகப் பரிந்துரைக்கப்படுபவர்கள் ஆவார்கள்.
ஒருவர் டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர். இன்னொருவர் நிர்வாகக் குழுவால் வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சுதந்திரமான நிபுணர்.
அறக்கட்டளைகள் பரிந்துரைக்கும் மூவரில் ஒருவர் தலைவர். அவர் யாரென்பதையும் அறக்கட்டளையே முடிவு செய்யும்.

பரிந்துரை மட்டும் தான்... நியமிக்க முடியாது!
இப்படி பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முறையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டாலும், இந்தத் தேர்வுக்குழுவால் நேரடியாக டாடா சன்ஸ் தலைவரை நியமிக்க முடியாது. அவர்களால் தகுதியான நபரை பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.
அதன் பிறகு, குறிப்பிட்ட வாக்கெடுப்பு விதிகளின் அடிப்படையில் டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவே இறுதி நியமனத்தை முறைப்படி செய்யும்.
தேர்வு செய்யும் பணியில் டாடா அறக்கட்டளைகளுக்கு அதிக அதிகாரம் இருந்தாலும், இறுதி முடிவை எடுப்பது டாடா சன்ஸ் நிர்வாகக் குழுதான்.
நோயல் டாடாவிற்கு வாய்ப்பு?
2024-ம் ஆண்டு, தான் இறப்பதற்கு முன்பு வரை, டாடா அறக்கட்டளையில் தலைவராக இருந்தார் தொழிலதிபர் ரத்தன் டாடா. அவரது மறைவிற்குப் பிறகு, அந்தப் பதவி அவருடைய தம்பியான நோயல் டாடாவிற்கு சென்றது.
அப்போது, டாடா சன்ஸ் தலைவர் பதவியும் இவருக்கே கிடைக்குமா என்று பார்த்தால், அது முடியாது.
2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிகளின் படி, சர் தொராப்ஜி டாடா டிரஸ்ட் அல்லது சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றின் தலைவராக இருப்பவர், டாடா சன்ஸ் தலைவராகப் பொறுப்பேற்க முடியாது.

அதனால், இந்த விதிமுறைப்படி நோயல் டாடாவிற்கு டாடா சன்ஸ் தலைவர் பதவி கிடைக்காது.
இப்போது யார் பெயர் அடிப்படுகிறது?
தேர்வுக்குழு, நோயல் டாடாவை எல்லாம் தாண்டி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்தத் தலைவர் இவர் தான் என்று டி.வி.நரேந்திரன் பெயர் அடிப்படுகிறது.
இவர் தான் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. இவருக்கும், டாடா குழுமத்திற்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் உறவு உள்ளது.
டாடா குழுமத்தின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான டாடா ஸ்டீல் நிறுவனத்தைச் சிறப்பான முறையில் இவர் வழிநடத்தி வருவதால் இவர் அடுத்தத் தலைவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், இந்த ஆண்டில் தொடக்கத்திலேயே நரேந்திரனை டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவிற்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


