ஈரோடு: அரசுப் பள்ளியில் அறுந்து கிடந்த மின்கம்பி; துடிதுடிக்க உயிரிழந்த 6- ம் வகுப்பு மாணவன்!
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள குப்பிச்சிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில் யோகேஷ் என்கிற 11 வயது மாணவர் 6 - ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இன்று மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்திற்குள் வழக்கம்போல் நடந்து சென்றிருக்கிறார். எதிர்பாராத விதமாக பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை, தெரியாமல் மிதித்திருக்கிறார்.
யோகேஷ் உடல் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். மாணவனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்தின் அலட்சியம்தான் காரணம் எனக் கூறி மாணவனின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுப்பள்ளி வளாகத்திற்குள் அறுந்து கிடந்த மின்கம்பி 6- ம் வகுப்பு மாணவனின் உயிரை காவு வாங்கியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


