பஞ்சாப்: ஹர்பஜன் சிங் பகிர்ந்த `ஜோம்பி போதை இளைஞர்கள் வீடியோ; ஆம் ஆத்மி அரசு பதிலடி!

பா.ஜ.க எம்.பி ஹர்பஜன் சிங் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த விடியோவில் டர்பன் அணிந்த சிலர் சாலையோரத்தில் நிலைகுலைந்து, நிற்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

அந்த வீடியோவைப் பகிர்ந்த ஹர்பஜன் சிங், ``என் பஞ்சாபின் மீது தீய கண் பட்டுவிட்டது, நண்பா... அரசு பஞ்சாபையும் அதன் இளைஞர்களையும் சீரழித்துவிட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது அழுகைதான் வருகிறது. என் பஞ்சாபை மன்னியுங்கள்... பஞ்சாபை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்? ஒரு காலத்தில் செழிப்பு, துணிச்சல் மற்றும் வீரத்திற்குப் பெயர் பெற்ற பஞ்சாப்.

ஆனால் இன்று, அதே பஞ்சாபின் இளைஞர்கள் போதைப் பழக்கத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். இன்னும் காலம் இருக்கிறது. என் பஞ்சாபைக் காப்பாற்றுங்கள். பஞ்சாபின் இளைஞர்களைக் காப்பாற்றுங்கள்" என உருக்கமாகப் பதிவிட்டு, போதைப்பொருள் பிரச்னையை ஆம் ஆத்மி அரசு கையாளும் விதத்தை விமர்சித்து அரசியல் ரீதியான தாக்குதலைத் தொடுத்தார்.

அதைத் தொடர்ந்து அந்த வீடியோ பஞ்சாபில் வைரலானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பஞ்சாப் மாநில அமைச்சர் டாக்டர் பல்ஜித் கவுர், ``ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காகரில் எடுக்கப்பட்ட வீடியோவை பஞ்சாபில் நடந்த சம்பவமாக பா.ஜ.க தலைவர் சித்தரிக்கிறார். மேலும் ஹர்பஜன் சிங் தனது அரசியல் மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த முயல்கிறார். பாஜகவின் அரசியலுக்காக பஞ்சாபின் நற்பெயரைக் கெடுக்கத் துணிந்துவிட்டார்" என நேரடியாகத் தாக்கிப் பேசினார்.

அமைச்சர் கூறியது போல, இந்தச் சம்பவம் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காகரில் நடந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த நபர்கள் ஏதேனும் போதைப்பொருளைப் பயன்படுத்தினார்களா என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.