ஜார்கண்ட்: 3 தேர்வாணைய அதிகாரிகள் ராஜினாமா; ஆனாலும் தொடரும் மாணவர்கள் போராட்டம்? - காரணம் என்ன?
டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC, JSSC தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகத் தேர்வர்கள் நேற்றுடன் 16-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அரசுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுக்களின் இரு பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே ரஞ்சியில் ஆறு மணி நேரப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் முடிவில், 14-வது JPSC தேர்வு உள்ளிட்ட மூன்று தேர்வுகளை ரத்து செய்ய அம்மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும், JPSC தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையையும் மாநில அரசு ஏற்றுக்கொண்டது. இதனிடையே, மாநிலத்தில் தீவிரமடைந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூன்று உறுப்பினர்கள் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்த தொழில்நுட்ப மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் சுதிவ்யா குமார் சோனு, ``மாணவர்களின் 98% கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டது. இருப்பினும், JSSC-CGL தேர்வு முடிவுகளை ரத்து செய்து, JPSC தொடர்புடைய அனைத்து தேர்வுகளுக்கும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை தங்களது போராட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட தேர்வு என்பதால், CGL தேர்வு முடிவுகளை மாநில அரசால் ரத்து செய்ய முடியாது" என விளக்கமளித்திருக்கிறார்.

இதற்கிடையில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ``போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும். பேச்சுவார்த்தை மூலமே அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். மாநிலத்தின் சுயசார்பை ஏற்றுக்கொள்ள முடியாமல், சுயநல சக்திகள் ஜார்க்கண்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஆயுதங்கள் எல்லையில் உள்ள எதிரிகளுக்கானவை. தேர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு முழு வெளிப்படைத்தன்மையுடன் நீதி வழங்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். நீதி வழங்கப்படுவது மட்டுமன்றி, அது வழங்கப்படுவதை அனைவரும் உணரும் வகையிலும் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார், JPSC உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

