வாரிய தலைவர் பதவிக்கு 5 அன்பு பரிசுகள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?
யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க... என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரில் கோடிகளில் வசூல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறதென கிசுகிசுக்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.
விஷயம் என்னவென அறிய கோட்டை விவகாரங்களை உன்னிப்பாக கவனிக்கும் சில அரசியல் புள்ளிகளிடம் பேசினோம், தவெக ஆட்சியில் இன்னமும் வாரியத் தலைவர் பதவிகள் முழுமையாக நிரப்பப்படவில்லை. கு.ப.கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பதவி, லயலோ மணி தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
எஞ்சிய வாரியங்களெல்லாம் இன்னும் நிரப்பபடவில்லை. தேர்தலில் சீட் கிடைக்காத மா.செக்கள், சீட் வாங்கி தோற்ற நிர்வாகிகள், பசையோடு காத்திருக்கும் முக்கியஸ்தர்கள் என நூற்றுக்கணக்கானோர் வாரிய பதவிகளுக்காக காத்திருக்கின்றனர். இதில்தான் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்தே வாரிய பதவிக்கு அன்பு பரிசுகளை வாங்க தொடங்கியிருக்கின்றனர். அண்டை மாநில பின்னணி கொண்ட முதல்வருக்கு நெருக்கமான புள்ளி ஒருவர் 6 வாரியங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வாங்கி வைத்திருக்கிறார். அந்த அண்டை மாநில முக்கிய புள்ளிக்கு நெருக்கமான முருகக் கடவுள் பெயர் கொண்ட புள்ளிதான் நியமனத்தையெல்லாம் பார்த்துக் கொள்கிறார்.

ஒரு வாரியத்தின் தலைவர் பதவிக்கு 5 அன்பு பரிசுகள் வரை விலை நிர்ணயம் செய்திருக்கிறார் முருகக் கடவுள் பெயர் கொண்ட அந்த புள்ளி. அட்வான்ஸாக 1 அன்பு பரிசு போலீஸ் சான்றழித்த பிறகு 1 அன்பு பரிசு, நியமனத்தின் போது 3 அன்பு பரிசுகள் என பேமெண்ட் பேசப்படுகிறது. மூன்று வாரியங்களுக்கான புக்கிங் முடிந்திருக்கிறது. பரிசு அதிகமிருப்பதால் ரிட்டர்ன் பரிசை எடுக்க முடியுமா என பலரும் யோசிக்கின்றனர். இன்னும் சிலரோ பரிசு அதிகம் இருந்தாலும் இந்த அரசோடு தொடர்பிலிருக்க நல்ல வாய்ப்பு இதை பயன்படுத்திக் கொள்வோம் என அன்பு பரிசுகளை தயக்கமின்றி இறக்குகிறார்கள்.
முதல்வருக்கு நெருக்கமான அந்த அண்டை மாநில பின்னணி கொண்ட முக்கியப் புள்ளியின் பெயரில்தான் இதெல்லாம் நடக்கிறது. ஆனால், விஷயம் அவருக்கு தெரிந்து நடக்கிறதா தெரியாமல் நடக்கிறதா எனும் குழப்பத்தில் பலரும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர்" என்றனர்.

நியாயமான முறையில் லஞ்சம் ஊழல் இல்லாமல் நியமனங்கள் நடக்குமென எங்களின் தளபதி முதலமைச்சர் விஜய் உறுதி கொடுக்கிறார். ஆனால், அவரை சுற்றியிருப்பவர்களின் பெயரை சொல்லியே கமிஷன் கேட்கிறார்கள். இது ஆட்சிக்குதான் கெட்டப் பெயரை ஏற்படுத்தும் என வருந்துகின்றனர் தவெகவுக்காக நீண்ட காலமாக உழைத்த நிர்வாகிகள்.
முதல்வரை சுற்றியே நடக்கும் வசூல் வேட்டை முதல்வரின் பார்வையை எட்டுமா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


