அமெரிக்கா-ஈரான் மோதல்: இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு, சென்செக்ஸ் 1700 புள்ளிகள் வீழ்ச்சி

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள மோதல் போக்கு உலகளாவிய முதலீட்டாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுடனான இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் என்ற அச்சத்தால் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தன.

 

வர்த்தக தொடக்கத்திலேயே சரிவுடன் காணப்பட்ட சந்தை, டிரம்பின் கருத்துக்கு பின் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,707.94 புள்ளிகள் சரிந்து 76,472.78 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 521.2 புள்ளிகள் வீழ்ந்து 23,877.50 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் நஷ்டத்தைச் சந்தித்தன. குறிப்பாக மாருதி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைக் கண்டன.

 

மறுபுறம், இந்த பதற்றமான சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6.19 சதவீதம் உயர்ந்து, பேரல் ஒன்றுக்கு 78.75 டாலராக அதிகரித்துள்ளது. ஆசிய சந்தைகளான ஜப்பானின் நிக்கி மற்றும் தென் கொரியாவின் கோஸ்பி ஆகியவையும் பலத்த சரிவைச் சந்தித்தன. ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு நடந்து வரும் வேளையில், இந்த மோதல் வெடித்து உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியுள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.